திருக்குறளில் 1500 குறள் இருந்ததாகவும் அதை தற்போது 1330 ஆக குறைத்துவிட்டதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

திருவள்ளுவ நாயானாரின் ஞானவெட்டியான் என்ற நூலின் அட்டைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "திருக்குறள் 1500 குறளின் சான்று இது... சரி...அப்ப 1330 குறளா யாரு குறைச்சிருப்பா... அதுசரி வள்ளுவரையே மாத்துனவங்களுக்கு அவர் எழுதுன குறளை மாத்தமாட்டாங்களா என்ன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Amsi Ramesh என்பவர் 2021 ஜனவரி 21 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஓலைச் சுவடியாக தீயில் எரிக்கப்பட இருந்த திருக்குறளை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்தான் முதன் முதலில் அச்சிடப்பட்டு வெகு மக்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது என்று சொல்வது உண்டு. உண்மையில் திருவள்ளுவர் யார், எப்படி இருந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. செவிவழி கதைகள் மட்டுமே சொல்லப்படுகின்றன. அதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று தமிழறிஞர்கள் கூறுகின்றனர். எனவே திருவள்ளுவர் எப்போது வாழ்ந்தார், எப்படி இருந்தார் என்ற விவகாரத்துக்குள் நாம் செல்லவில்லை.

திருக்குறளில் 1500 குறள்கள் இருந்ததாகவும். தற்போது அதிலிருந்து பெரும்பகுதியை நீக்கிவிட்டு 1330 குறள்கள் மட்டுமே உள்ளது என்று ஒரு பதிவு பகிரப்பட்டு வருகிறது. அதற்கு ஆதாரமாக "திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்த ஞானவெட்டியான் 1500 பாடல் மூலமும் - உரையும்" என்ற நூலின் அட்டைப் படம் பகிரப்பட்டுள்ளது. அதில் தெளிவாக திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்த ஞானவெட்டியான் என்று இருக்கிறது. திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த திருக்குறள் என்று இல்லை. எனவே, இரண்டும் வெவ்வேறு நூல்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

ஞானவெட்டியான் என்று நூல் எதுவும் உள்ளதா, அது எப்போது எழுதப்பட்டது என்று ஆய்வு செய்தோம். அப்போது ஞானவெட்டியான் என்ற நூல் இருப்பதும், அது 1500 பாடல்களுடன் இருப்பதும் தெரியவந்தது. சித்தர்களின் கொள்கையை விளக்கும் நூல்களுள் ஒன்று என்று அதைப் பற்றி குறிப்பிட்டிருந்தனர்.

மேலும் இந்த நூலில் "சாயாமல் அதிவீரராமபாண்டியன் சொல்லும் தமயந்தி சரித்திர நைடதமும்" என்று பாடல் உள்ளது. அதிவீரராமபாண்டியன் காலம் கி.பி. 16ம் நூற்றாண்டு. எனவே, ஞான வெட்டியான் கி.பி. 16ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதியிருக்க வேண்டும் என்கின்றனர். சிலர் 11ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்கின்றனர். எனவே, திருக்குறளை எழுதிய திருவள்ளுவரும், ஞானவெட்டியானை எழுதிய திருவள்ளுவரும் வேறு வேறு என்று தமிழறிஞர்கள் கூறுவதாகவும் செய்தி கிடைத்தது.

தொடர்ந்து தேடியபோது ஞானவெட்டியான் நூல் இணையத்திலேயே கூட விற்பனைக்கு இருப்பதும், இணையத்தில் அதன் பி.டி.எஃப் பதிப்பு இலவசமாகக் கிடைப்பதும் தெரிந்தது. செய்யுள் வடிவத்திலேயே பலரும் இதை இணையத்தில் வெளியிட்டிருப்பதும் நமக்கு கிடைத்தது.

அசல் பதிவைக் காண: udumalai.com I Archive

எனவே, திருவள்ளுவர் எழுதிய ஞானவெட்டியான் என்ற நூலை திருக்குறளோடு தொடர்புப்படுத்தி தவறான தகவல் பரப்பி வருவது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் திருக்குறளில் உள்ள குறள்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

திருக்குறளுக்கும் ஞானவெட்டியான் நூலுக்கும் வித்தியாசம் தெரியாமல் தவறான தகவல் பரப்பி வருவதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:1500 ஆக இருந்த குறளின் எண்ணிக்கையை 1330 ஆக குறைத்துவிட்டார்கள் என்று பரவும் தகவல்! /p> Fact Check By: Chendur Pandian

Result: False