
அருணாச்சல பிரதேசத்தில் இந்தியா – சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த நேருக்கு நேர் மோதல் காட்சி என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
சீன ராணுவ வீரர்கள் தாக்கப்படுவது போன்று படங்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “நேற்று அருணாச்சல் பிரதேசத்தில் இந்தியா சீன நேருக்கு நேர் மோதல்..
பல சீனர்களின் மூக்கை உடைத்து அவர்களை இந்திய வீரர்கள் புரட்டிபோட்டு உதைத்ததாக தகவல்.. இந்தியாவிற்குள் 200 சீனர்களை ஊடுருவ முயன்றனர் அவர்களை உதைத்ததில், அவர்களில 10 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தகவல்.. இந்திய வீரர்களுக்கு பெரும் சேதம் இல்லை..
சீனாவிடம் உதை வாங்கிய காலம் போய் இப்போது சீனனை உதைக்கும் காலம் வந்து விட்டது.. ஆக இது தான் புது இந்தியா??
ஜெய்ஹிந்த். பக்கா ஆதாரம்…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை என் தேசம் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 அக்டோபர் 10ம் தேதி பதிவிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கடந்த 2020ம் ஆண்டு லடாக் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சூழலில், தற்போது அருணாச்சல பிரதேசத்தில் எல்லைப் பகுதியில் சீனா மீண்டும் அத்துமீறலை மேற்கொண்டது. 200 சீன ராணுவ வீரர்கள் இந்தியாவுக்குள் நுழைய முயன்றனர். அவர்களை இந்திய ராணுவ வீரர்கள் விரட்டியடித்தனர். சீன ராணுவ வீரர்கள் சிலர் சிறை பிடிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்த சூழலில் அருணாச்சல பிரதேசத்தில் சீன ராணுவ வீரர்களை விரட்டி அடித்த இந்திய ராணுவ வீரர்கள் என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த படம் அருணாசலப்பிரதேச எல்லையில் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம்.

அசல் பதிவைக் காண: viettimes.vn I Archive 1 I li1995.com I Archive 2
சீன ராணுவ வீரர் ஒருவரை சீக்கிய அதிகாரி பிடித்திருக்கும் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது அந்த படம் ஓராண்டாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதைக் காண முடிந்தது. கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாராகி வரும் இந்தியத் திரைப்படம் ஒன்றின் காட்சி என்று பலரும் அதைக் குறிப்பிட்டிருந்தனர். அருணாச்சல பிரதேசத்தில் சீன வீரர்கள் அத்துமீறல் நடந்தது 2021 அக்டோபரில்.
ஆனால், இந்த புகைப்படம் 2020 டிசம்பரில் வெளியிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்த புகைப்படம் அருணாசலப்பிரதேசத்தில் சீன ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டபோது எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியானது.

அசல் பதிவைக் காண: bbc.com I Archive
அடுத்தது ஆற்றில் ராணுவ வீரர்கள் நிற்கும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அந்த புகைப்படம் கடந்த ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதலின் போது எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது. இந்த புகைப்படத்தை சீன தரப்பில் கடந்த ஆண்டு எடுத்துள்ளனர். ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரியில் சீன அரசு இதை வெளியிட்டது என்று செய்திகள் கிடைத்தன.
இதன் மூலம் அருணாச்சல பிரதேசத்தில் சீன ராணுவ வீரர்களை இந்திய ராணுவ வீரர்கள் தாக்கிய காட்சி என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
அருணாச்சலப்பிரதேசத்தில் அத்துமீறிய சீன ராணுவ வீரர்களை தாக்கிய இந்திய ராணுவ வீரர்கள் என்று பகிரப்படும் படம் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:அருணாச்சல பிரதேசத்தில் தாக்கப்பட்ட சீன ராணுவ வீரர்கள் படமா?
Fact Check By: Chendur PandianResult: False
