
தூத்துக்குடியில் ரூ.1.54 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிழற்குடை ஒன்றை கனிமொழி திறந்துவைத்துள்ளார், என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவலை கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link
இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’ தூத்துகுடி மக்களுக்கு கிடைத்த ஜேக்பாட். உலகிலேயே மிக விலை உயர்ந்த நிழற்குடை. வெறும் 154 லட்சம் மட்டுமே. அதாகப்பட்டது 1கோடியே 54 லட்சம். விடியல் அரசின் உலகசோதனை,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதன் கீழே பேருந்து நிழற்குடை மற்றும் கல்வெட்டு புகைப்படங்களும் பகிரப்பட்டுள்ளன.
உண்மை அறிவோம்:
இந்த தகவலை முதலில், பாஜக.,வைச் சேர்ந்த காயத்ரி ரகுராம் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அதனை பார்த்தே மற்றவர்களும் ஷேர் செய்து வருகின்றனர்.
சமீபத்தில், தூத்துக்குடியில் புதியதாக அமைக்கப்பட்ட பேருந்து நிழற்குடை ஒன்றை மக்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் தமிழ்நாடு அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். அந்த நிழற்குடை அருகே, ‘’நவீன பேருந்து நிழற்குடை அமைத்தல் மதிப்பீடு ரூ.154 லட்சம்,’’ என கல்வெட்டில் எழுதப்பட்டிருந்தது. அதனையே குறிப்பிட்டு, பலரும் விமர்சித்து வருகின்றனர்.
உண்மையில், இது ஒரு நிழற்குடைக்கு மட்டும் இவ்வளவு செலவு என அர்த்தம் இல்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் இந்த நிழற்குடை திறக்கப்பட்டதாக, அமைச்சர் கீதா ஜீவன் ட்விட்டரில் தகவல் பகிர்ந்திருக்கிறார்.
இதன்படி, மொத்தம் அந்நகரில் 8 இடங்களில் சுமார் ரூ.1 கோடியே 54 லட்சம் மதிப்பீட்டில் 8 பேருந்து நிழற்குடைகள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றையே கனிமொழி மற்றும் கீதா ஜீவன் ஆகியோர் திறந்து வைத்தனர். இதுபற்றி தூத்துக்குடி மாநகராட்சியும் ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
எனவே, 8 இடங்களில் ரூ.1.54 கோடி மதிப்பீட்டில் நிழற்குடைகள் அமைக்கப்பட்டதை தவறாக புரிந்துகொண்டு, ஒரு நிழற்குடையின் செலவு இவ்வளவு என, வதந்தி பரப்பி வருகின்றனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:தூத்துக்குடியில் ரூ.1.54 கோடி மதிப்பீட்டில் கனிமொழி பேருந்து நிழற்குடை திறந்து வைத்தாரா?
Fact Check By: Pankaj IyerResult: Partly False
