
‘’விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற டிராக்டரை போலீசார் துரத்தும் வீடியோ,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

கடந்த ஜனவரி 26, 2021 அன்று மேற்கண்ட தகவல் பகிரப்பட்டுள்ளது. இதில் டிராக்டர் ஒன்றை கார் ஒன்று துரத்திச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதன் மேலே, ‘’போராட்டத்திற்கு போகவிடாமல் #டிராக்டரை முடக்க நினைத்த போலீஸ் தனி ஒருவனாக கெத்துக்காட்டி நின்ற #விவசாயி,’’ என்று எழுதியுள்ளனர்.
இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்வதைக் காண முடிகிறது.

Screenshot: FB posts with similar caption
உண்மை அறிவோம்:
ஜனவரி 26, 2021 அன்று, டெல்லிக்குள் நுழைந்து செங்கோட்டையை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்துவதாக, பல்வேறு விவசாய சங்கங்கள் அறிவித்திருந்தன. இதன்பேரில், அன்றைய தினம் டிராக்டரில் வரிசையாக வந்து, டெல்லிக்குள் நுழைந்து செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள், பல இடங்களில் போலீசாருடன் வன்முறையிலும் ஈடுபட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜனவரி 26 இந்தியாவின் குடியரசு தினம் ஆகும். அன்றைய நாளில் நிகழ்ந்த இந்த விவசாயிகள் போராட்டம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தது.
இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்தை மையமாக வைத்து பலவிதமான தகவல்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் நாம் மேலே கண்ட வீடியோ தொடர்பான தகவலும். உண்மையில், விவசாயிகள் போராட்டத்திற்கும், இந்த வீடியோவிற்கும் எந்த தொடர்பும் இல்லை.
இந்த வீடியோ, உத்தரகாண்ட் மாநிலத்தில் போலீசார், சட்டவிரோதமாக மணல் அள்ளிய டிராக்டர் ஒன்றை சுற்றி வளைக்க முயன்றபோது எடுக்கப்பட்டதாகும். இதுதொடர்பான நிறைய வீடியோ, செய்திகள் இணையத்தில் காணக் கிடைக்கின்றன.
உத்தரகாண்டில் உள்ள காஷிபூர் பகுதியில், கோசி ஆற்றில் மணல் அள்ளிய வாகனத்தை போலீசார் சுற்றி வளைக்க முயன்று, பின்னர் அந்த டிராக்டர் தப்பிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுவும், விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி காலக்கட்டத்தில் பகிரப்படுவதால், பலர் அதனை விவசாயிகள் போராட்டத்துடன் தொடர்புபடுத்தி வதந்தி பரப்பி வருகின்றனர்.
எனவே, ஜனவரி 22, 2021 அன்று வெளியான உத்தரகாண்ட் தொடர்பான மணல் கடத்தல் வீடியோவை எடுத்து, ஜனவரி 26, 2021 அன்று நிகழ்ந்த விவசாயிகள் டிராக்டர் பேரணியுடன் தொடர்புபடுத்தி தவறான தகவல் பகிர்வதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title: விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற டிராக்டரை போலீசார் துரத்தியதாக பரவும் வதந்தி
Fact Check By: Pankaj IyerResult: False
