ராம்நாத் கோவிந்துக்கு சிவப்பு கம்பள வரவேற்பு மறுக்கப்பட்டதா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

ஜனாதிபதியாகவே இருந்தாலும் சிவப்பு கம்பளத்தில் வர முடியாது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிவப்பு கம்பளத்தில் நடந்து வருகிறார். அவருக்கு அருகில் சிவப்பு கம்பளத்துக்கு வெளியே ஓரமாகக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நடந்து வரும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஜனாதிபதியாகவே இருந்தாலும் ரெட் கார்பெட்டில் வரமுடியாது.இதுல பழங்குடிஇனத்த உச்சில உக்காரவைக்கப் போறாங்களாம் முர்மு மேடம் கவனம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை, Azhakesan G என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜூன் 25ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பட்டியலினத்தைச் சார்ந்தவர். நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் முர்மு பழங்குடியினப் பிரிவைச் சார்ந்தவர். பட்டியலினம், பழங்குடியினத்தைச் சார்ந்தவர்கள் குடியரசுத் தலைவராகவே ஆனாலும் அவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது என்ற வகையில் பதிவிடப்பட்டு வருகிறது. உண்மையில் ராம்நாத் கோவிந்தை சிவப்புக் கம்பளத்துக்கு வெளியே நடந்து வரச் சொல்லிவிட்டு, அமித்ஷா மட்டும் சிவப்பு கம்பளத்தில் வந்தாரா என ஆய்வு செய்தோம்.

இந்த புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இது கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் குஜராத்தில் நடந்த நரேந்திர மோடி ஸ்டேடியம் தொடக்க விழாவின் போது எடுக்கப்பட்டது என்று தெரிந்தது. இது தொடர்பாக தூர்தர்ஷன் வெளியிட்டிருந்த வீடியோ கிடைத்தது. 

விழாவுக்கு வரும் ராம்நாத் கோவிந்த்க்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து பூமி பூஜை நடக்கிறது.  பூமி பூஜையில் பங்கேற்றுவிட்டு மேடைக்கு வரும் வழியில் இந்த காட்சி வருகிறது. வீடியோவை பார்க்கும் போது யாரும் சிவப்பு கம்பளத்தில் நடந்து வரவில்லை. சிவப்பு கம்பளத்தைக் கடந்து செல்வது தெரிகிறது. குறுக்காக நடக்கும் போது ராம்நாத் கோவிந்துக்கு பக்கவாட்டிலிருந்த அமித்ஷா முதலில் சிவப்பு கம்பளத்தின் மீது ஏறி நடக்கிறார். அவரைத் தொடர்ந்து ராம்நாத் கோவிந்தும் சிவப்பு கம்பளத்தில் ஏறி நடந்து அதைக் கடந்து செல்வது தெரிகிறது. இதை வீடியோவின் 4.47வது நிமிடத்தில் காணலாம்.

இதன் மூலம் ராம்நாத் கோவிந்துக்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்படவில்லை என்பது தவறானது என்று உறுதியாகிறது. வீடியோவின் முழு காட்சியையும் வெளியிடாமல், ஒரே ஒரு புகைப்படத்தை மட்டும் எடுத்து தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு சிவப்பு கம்பளத்தில் நடப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டது என்று பரவும் படம் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ராம்நாத் கோவிந்துக்கு சிவப்பு கம்பள வரவேற்பு மறுக்கப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False