
அரசியல் விமர்சகர் என்று அழைக்கப்படும் சவுக்கு சங்கர் காலமாகிவிட்டார் என்று சிலர் சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர். இதையும் ஏராளமானவர்கள் லைக், ஷேர் செய்து வரவே அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
சவுக்கு சங்கர் புகைப்படத்துடன் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் தயாரிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் பெயரில் இந்த போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரை தேவரின சிறப்புச் செய்திகள் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2022 ஜூலை 22ம் தேதி பதிவிட்டுள்ளது. இதை ஆயிரக் கணக்கானோர் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்தையும் விமர்சிப்பவர் சவுக்கு சங்கர். யூடியூப் ஊடகங்கள் அவரை ஊடகவியலாளர், அரசியல் விமர்சகர் என்று பேட்டி எடுத்து வெளியிடுகின்றன. அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தைப் பற்றி தொடர்ந்து விமர்சன பதிவுகளை வௌியிட்டு வந்ததால் குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் சவுக்கு சங்கருக்கு எதிராக சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனாலும் அவர் விமர்சிப்பதை நிறுத்தாத சூழலில் கடந்த மார்ச் மாதம் 19ம் தேதி அவர் இறந்துவிட்டதாக கூறி கண்ணீர் அஞ்சலி பதிவு பகிரப்பட்டு வருகிறது.
தங்களுக்கு பிடிக்காதவர்கள் இறந்துவிட்டதாக கூறி கண்ணீர் அஞ்சலி போஸ்டரை சமூக ஊடகத்தில் பரப்புவது ஒன்றும் புதிது இல்லை. மன்மோகன் சிங், கி.வீரமணி, ஜோதிகா, கருணாஸ், விந்தியா என பலருக்கும் இப்படி கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வந்துள்ளன. சவுக்கு சங்கர் கூட விபத்தில் இறந்து விட்டார் என்று முன்பு வதந்தி பரப்பப்பட்டது. தற்போது மீண்டும் சவுக்கு சங்கர் மறைந்துவிட்டார் என்று வதந்தி பரப்பி அதில் சிலர் மகிழ்ச்சி காண்கின்றனர்.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட கண்ணீரஞ்சலி போஸ்டரில் குறிப்பிட்டது போன்று 2022 மார்ச் மாதம் அவர் உயிரிழக்கவில்லை. அவருடன் நேரடியாக பழக்கம் இல்லை என்றாலும், அவருக்கு நெருங்கிய ஊடகவியலாளர்கள் பலரும் நமக்கு நண்பர்களாக உள்ளனர்.
சவுக்கு சங்கர் மரணமடைந்துவிட்டார் என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரவுகிறது என்று அவரிடமே எப்படி சொல்வது என்று சங்கடப்பட்டு அவருடைய நண்பர் ஒருவரிடம் இது பற்றி தெரிவித்தோம். அவர் நம்மிடம், “சவுக்கு சங்கர் நலமாக உள்ளார். அவ்வப்போது இப்படி வதந்தி பரவிக்கொண்டுதான் இருக்கிறது. இப்போது பரவும் வதந்தி குறித்து கூட சவுக்கு சங்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்” என்று கூறி சவுக்கு சங்கர் வெளியிட்ட ட்வீட் பதிவை நமக்கு அளித்தார்.
அதில் சவுக்கு சங்கர் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பகிர்ந்து, இதை தி.மு.க முன்னணி தலைவர்கள் பரப்புகின்றனர் என்ற வகையில் குற்றம்சாட்டியிருந்தார்.
அரசியல் உள்நோக்கத்துடன் பதிவிடப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டரை உண்மை என்று கருதியும் வன்மத்தைத் தணிக்கச் சிலரும் இந்த பதிவை பகிர்ந்து வருகின்றனர் என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
சவுக்கு சங்கர் காலமாகிவிட்டார் என்று பரவும் பதிவு தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:சவுக்கு சங்கர் மறைந்துவிட்டதாக வதந்தி பரப்பும் விஷமிகள்!
Fact Check By: Chendur PandianResult: False
