
வட மாநிலத் தொழிலாளர்கள் வருகிற மார்ச் 20ம் தேதிக்குள் தமிழ்நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கெடு விதித்துள்ளார் என்று வட இந்தியாவில் வதந்தி வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
தகவலின் விவரம்:

நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் இந்தியில் பரவும் பதிவு ஒன்றை மொழிமாற்றம் செய்து நமக்கு அனுப்பியிருந்தார். இந்த வதந்தி பற்றி ஃபேக்ட் செக் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டிருந்தார். அதில், “தமிழ்நாட்டில் இந்தி தொழிலாளர்கள் கொல்லப்படுகின்றனர். மார்ச் 20ம் தேதிக்கு முன் இந்திக்காரர்கள் வெளியேற வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அதன் பிறகு நிகழும் சம்பவங்களுக்கு தமிழக அரசு பொறுப்பேற்காது” என்று கூறியது போலவும், “வட மாநிலத் தொழிலாளர்கள் உத்தரப்பிரதேசத்துக்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர்களுக்கு நிச்சயம் வேலை கிடைக்கும்” என்றும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியது போலவும் வட இந்திய ஊடகம் ஒன்றில் செய்தி வெளியிட்டது போன்று இருந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
இந்த பதிவு ஃபேஸ்புக்கில் வைரலாக பகிரப்படுகிறதா என்று தேடிப் பார்த்தோம். பலரும் இந்த பதிவை பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது.

உண்மை அறிவோம்:
தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் குறிப்பாக பீகார் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகத் திட்டமிட்டு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. வதந்தி பரப்புபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஆனாலும், வதந்தி பரவுவது குறையவில்லை. வட இந்திய தொழிலாளர்கள் மார்ச் 20ம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்தது போன்று வட இந்திய செய்தி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது போன்று வதந்தி பரப்பப்படுகிறது.

அந்த ஸ்கிரீன்ஷாட்டில், News Banner Maker என்று லோகோ தெளிவாகத் தெரிகிறது. அது என்ன என்று அறிய கூகுளில் பதிவிட்டுத் தேடினோம். அப்போது அது மொபைல் போன் ப்ளேஸ்டோரில் உள்ள செய்தி நிறுவனங்கள் வெளியிட்டது போன்று செய்தியைப் போலியாக உருவாக்கிக்கொள்ளும் ஒரு செயலி என்று தெரிந்தது. அதை டவுன்லோட் செய்து பார்த்தோம்.

அதில் பல செய்தித்தாள் டெம்ப்ளேட் இருந்தன. அவற்றுக்கு இடையே நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவின் டெம்ப்ளேட்டும் இருந்தது. இந்த டெம்ப்ளேட்டை பயன்படுத்தி நாம் விரும்பும் செய்தியை உருவாக்கி பகிர்ந்துகொள்ளலாம். இப்படி செய்தித் தாள்கள் போன்ற டெம்ப்ளேட் இணையதளத்தில் அதிகம் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு ராகுல் காந்தியை அமெரிக்க போலீசார் கைது செய்தனர் என்று கூட இப்படி ஒரு செயலியை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட செய்தி கிளிப்பை பகிர்ந்து வதந்தி பரப்பியிருந்தனர். தற்போது தமிழர்கள், தமிழ்நாட்டுக்கு எதிராக வதந்தியை உருவாக்கியுள்ளனர்.
தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் கொலை செய்யப்படுகிறார்கள், தமிழ்நாட்டை விட்டு விரட்டியடிக்கப்படுகிறார்கள் என்று வதந்தி கிளம்பிய போதே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் அமைச்சர்கள் விளக்கம் அளித்திருந்தனர். பீகாரிலிருந்து அரசு சிறப்புக் குழு வந்து ஆய்வு செய்து, சமூக ஊடகங்களில் பரவும் தகவல் வெறும் வதந்தி என்று உறுதி செய்தது.
உண்மை இப்படி இருக்க, வட மாநில தொழிலாளர்கள், இந்தி பேசுபவர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சரே கூறினார் என்று தொடர்ந்து வதந்தி பரப்பி வருகின்றனர். வேண்டுமென்றே பிரச்னை ஏற்பட வேண்டும் என்ற நோக்கில் வதந்தி பரப்புவது தொடர்கிறது. வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் மட்டுமே இது போன்று வதந்திகள் பரவுவதைத் தடுக்க முடியும்.
முடிவு:
2023 மார்ச் 20ம் தேதிக்குள் வட இந்தியர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் நியூஸ் கிளிப் போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:இந்தித் தொழிலாளர்கள் வெளியேற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கெடு விதித்தாரா?
Fact Check By: Chendur PandianResult: False
