
திருமணம் ஒரு பாவச் செயல். எனவே, ஸ்வயம்சேவக்குகள் கண்டிப்பாக திருமண பந்தத்தில் ஈடுபடக்கூடாது என்றும், தன்னுடைய யோசனைப்படி செயல்பட்டுத்தான் பிரதமர் மோடி தன்னுடைய மனைவியை விலக்கினார் என்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் புகைப்படத்துடன் கூடிய ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “திருமணம் ஒரு பாவச்செயல்! ஸ்வயம்சேவக்குகள் கண்டிப்பாக திருமண பந்தத்தில் ஈடுபடக்கூடாது. திருமணம் செய்துக் கொள்வதால்தான் குழந்தை பிறக்கிறது. கர்மாவின் பலனை அனுபவித்து அல்லலுறுகிறது. இந்துக்கள் திருமணம் செய்வதை தவிர்த்தால், கர்மாவிலிருந்து தப்பலாம். ஏற்கனவே திருமணம் செய்தவர்கள் விவாகரத்து செய்வது நல்லது. என் யோசனையின்படி மோடி அப்படித்தான் செய்தார். – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை கே.எம். சரீப் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 மே 9ம் தேதி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதே நியூஸ் கார்டை பலரும் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

உண்மை அறிவோம்:
இந்துக்கள் திருமணம் செய்யக் கூடாது, குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூற வாய்ப்பு இல்லை. மேலும், என்னுடைய ஆலோசனைப்படிதான் பிரதமர் மோடி தன்னுடைய மனைவி விலக்கினார் என்று அவர் கூறியதாகக் குறிப்பிட்டிருப்பது மோகன் பகவத் மீது தவறான எண்ணம் ஏற்படுத்தும் நோக்கில் இந்த நியூஸ் கார்டு உருவாக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிந்தது. இந்த நியூஸ் கார்டின் தமிழ் ஃபாண்ட், பின்னணி டிசைன் வழக்கமாக ஜூனியர் விகடன் வெளியிடும் நியூஸ் கார்டில் உள்ளது போல இல்லை. எனவே, இந்த நியூஸ் கார்டு தொடர்பாக ஆய்வு செய்தோம்.
மோகன் பகவத் இந்துக்கள் திருமணம் செய்யக் கூடாது என்று கூறியிருந்தால் அது மிகப்பெரிய செய்தியாகியிருக்கும். அப்படி ஏதும் கூறினாரா என்று கூகுளில் தேடிப் பார்த்தோம். ஆனால் அப்படி அவர் கூறியதாக எந்த செய்தியும் கிடைக்கவில்லை. 2013ல் திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் சமூக ஒப்பந்தம் என்று அவர் கூறியதும், 2021ம் ஆண்டில் திருமணத்துக்காக மதம் மாறுவது தவறு என்று அவர் கூறிய செய்திகளும் நமக்குக் கிடைத்தன.
திருமணம் செய்யக் கூடாது, குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது, குறிப்பாக என்னுடைய ஆலோசனை அடிப்படையில் பிரதமர் மோடி தன்னுடைய மனைவியை விலக்கினார் என்று மோகன் பகவத் கூறியதாக எந்த செய்தியும் கிடைக்கவில்லை.
அடுத்து இந்த நியூஸ் கார்டை ஜூனியர் விகடன் வெளியிட்டதா என்று ஆய்வு செய்தோம். அதன் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்வையிட்டோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் குறிப்பிட்டிருப்பது போன்று ஏப்ரல் 29, 2022 அன்று மோகன் பகவத் புகைப்படத்துடன் ஒரு நியூஸ் கார்டை ஜூனியர் விகடன் வெளியிட்டிருந்தது தெரிந்தது.
ஆனால் அதில், “வன்முறையால் எந்த பயனும் இல்லை! வன்முறையால் இங்கு யாருக்கும் எந்த பயனும் இல்லை. வன்முறையை விரும்பும் சமுதாயம் தற்போது தனது கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை எடுத்து எடிட் செய்திருப்பது தெரிந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook
இதை உறுதி செய்ய, ஜூனியர் விகடன் டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளரை தொடர்பு கொண்டு, இதுபற்றி விவரம் கேட்டோம். அவரும், இந்த நியூஸ் கார்டு போலியானது, என்று உறுதி செய்தார். இதன் அடிப்படையில் இந்துக்கள் திருமணம் செய்யக் கூடாது என்று மோகன் பகவத் கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதியாகிறது.
முடிவு:
இந்துக்கள் திருமணம் செய்யக் கூடாது என்று மோகன் பகவத் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:திருமணம் ஒரு பாவச்செயல்; நான் சொல்லித்தான் மோடி அவரது மனைவியை விட்டு பிரிந்தார் என்று மோகன் பகவத் கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
