விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாதது… கீதையை பின்பற்றும்படி நிர்மலா சீதாராமன் அட்வைஸ் செய்தாரா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாதது எனவே மக்கள் கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்ற கீதை சாரத்தை நினைவில்கொள்ள வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புகைப்படத்துடன் கூடிய பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே. தற்போதைய பொருளாதார சூழலில் விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாதது. இந்நேரத்தில் கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்கிற கீதை சாரத்தை மக்கள் நினைவில் கொள்ளவேண்டும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு” என்று இருந்தது.

இந்த பதிவை S.m. Hidayathullah என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 மே 9ம் தேதி வெளியிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

விலைவாசி உயர்வை தவிர்க்க முடியாது என்று நிதியமைச்சர் கூறினார் என்று பலரும் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர். நியூஸ் கார்டின் பின்னணியில் துக்ளக் முன்னாள் ஆசிரியர் சோ படம் உள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நியூஸ் கார்டும் மே 9ம் தேதி வெளியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, துக்ளக் நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் இப்படிப் பேசினாரா என பார்த்தோம். ஆனால், நிர்மலா சீதாராமன் இப்படிக் கூறியதாக தகவல் இல்லை. அவருடைய பேச்சைப் பார்த்தோம். அந்த நிகழ்ச்சியில் அவர் அப்படி கூறவில்லை என்பது உறுதியானது. வேறு எங்காவது இப்படி பேசினாரா, அது தொடர்பாக செய்தி வெளியானதா என்று பார்த்தோம். அப்படி எந்த செய்தியும் கிடைக்கவில்லை.

அடுத்து இந்த நியூஸ் கார்டை பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்டதா என்று பார்த்தோம். அப்போது மே 9ம் தேதி நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று நியூஸ் கார்டு ஒன்றை பாலிமர் வெளியிட்டிருந்தது தெரிந்தது. ஆனால் அதில், “பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி வரம்புக்குள் வருமா? தமிழ்நாட்டு நிதி அமைச்சர் பெட்ரோல் டீசல் வரி விதிப்பை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவர ஒப்புக்கொண்டால் மத்திய அரசு உடனடியாக அதனை செய்யும். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து, தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது தெரிந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook

இதை உறுதி செய்துகொள்ள பாலிமர் நியூஸ் டிஜிட்டல் பிரிவைத் தொடர்புகொண்டு கேட்டோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டை நாங்கள் வெளியிடவில்லை என்று உறுதி செய்தனர். இதன் அடிப்படையில் விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாதது என்று நிதியமைச்சர் கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதியாகிறது.

முடிவு:

இந்துக்கள் திருமணம் செய்யக் கூடாது என்று மோகன் பகவத் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாதது… கீதையை பின்பற்றும்படி நிர்மலா சீதாராமன் அட்வைஸ் செய்தாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False