
‘’குதிரன் சுரங்கப்பாதை திறக்கப்பட்டுவிட்டதால், இனி கோவையில் இருந்து திருச்சூர் செல்ல 10 நிமிடம் போதும்,’’ என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link
குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில், ‘’ கோயம்புத்தூர்-திருச்சூர் சுரங்கப்பாதை திறக்கப்பட்டது. 2 மணி நேரப் பயணம் இப்போது 10 நிமிடம். இந்திய அரசின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு நன்றி. இது போன்ற செய்திகளை எந்த ஊடகமும் பேசாது, இங்குள்ள ஊடகங்கள் பிரிவினைவாதிகளின் ஆதரவாக செயல்படுகிறது. தேசத்திற்கு எதிரான கருத்துகளை பரப்புவதே வேலையாக கொண்டுள்ளது.👇 ,’’ என எழுதப்பட்டுள்ளது.
இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என கேட்டிருந்தார். இதன்பேரில், நாமும் ஆய்வு மேற்கொண்டோம்.
உண்மை அறிவோம்:
கோவை முதல் திருச்சூர் இடையே சுமார் 114 கிமீ தொலைவு உள்ளது. இதுவே, அவினாசி – திருப்பூர் – பல்லடம் – பொள்ளாச்சி வழியே பயணித்தால், 139 கிமீ தொலைவு. கிட்டத்தட்ட இந்த பயணத்தடம் 2 முதல் 4 மணிநேரம் கொண்டதாகும்.

இந்த சூழலில், குதிரன் சுரங்கப்பாதை வழியே பயணித்தால், இந்த பயண நேரம் வெறும் 10 நிமிடமாகக் குறையும் என்று மேற்கண்ட தகவலை பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். உண்மையில், அது தவறு. ஏனெனில், குதிரன் சுரங்கப்பாதை வெறும் 1.6 கிமீ மட்டுமே நீளம் கொண்டது. அது திருச்சூர் – பாலக்காடு மாவட்டங்களுக்கு இடையே வடக்கன்சேரி – மன்னூத்தி என்ற இடத்தில் அமைந்துள்ளது.
வனவிலங்குகளை பாதுகாக்கவும், சாலை விபத்துகளை குறைக்கவும் இந்த சுரங்கப்பாதை மலையை குடைந்து, நிறுவப்பட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் பொதுப் போக்குவரத்திற்காக, திறந்துவிடப்பட்டது.
இதன்படி, மலைப்பாங்கான பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறைய குதிரன் சுரங்கப்பாதை உதவியுள்ளதாக, நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த சுரங்கப் பாதையின் ஒரு முனையில் கோவையும், மறுமுனையில் திருச்சூரும் உள்ளதுபோல தவறாக புரிந்துகொள்ளக் கூடாது.
கோவை முதல் திருச்சூர் வரையான வழித்தடத்தில் திருச்சூர் அருகே இந்த குதிரன் சுரங்கப்பாதை வருகிறது. ஒட்டுமொத்த பயண நேரத்தில் (சுமார் 2 மணி முதல் 4 மணிநேரம் வரை) இந்த சுரங்கப்பாதை ஒரு 10 நிமிடத்தை குறைக்கிறது என்று வேண்டுமானால் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.
எனவே, தவறான புரிதலுடன் மேற்கண்ட வீடியோ செய்தியை பலரும் ஷேர் செய்து வருவதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:குதிரன் சுரங்கப்பாதை திறப்பு- கோவையில் இருந்து திருச்சூர் செல்ல 10 நிமிடம் போதுமா?
Fact Check By: Pankaj IyerResult: False
