FACT CHECK: விவசாயிகள் போராட்டத்தில் தேசியக் கொடியை அகற்றி பா.ஜ.க கொடி ஏற்றப்பட்டதாகப் பரவும் பழைய படம்!

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின் போது பா.ஜ.க -வினர் தேசியக் கொடியை அகற்றிவிட்டு பா.ஜ.க கொடியை ஏற்றியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

கோபுரம் ஒன்றின் மீது பா.ஜ.க கொடியைக் கட்டுவது போன்ற படம் பகிரப்பட்டுள்ளது. படத்தின் மேல், தேசிய கொடியை அகற்றி தங்கள் கொடியை நட்ட… தேச விரோத விவசாயிகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலைத் தகவலில், “விவசாயிகள் ஊர்வலத்தில் பயங்கரவாத RSS கும்பல்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை ஜனவரி 27, 2021 அன்று அப்துல் ரசீது என்பவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதைப் பதிவிட்டுள்ளனர்.

உண்மை அறிவோம்:

டெல்லியில் 2021 ஜனவரி 26 குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணியின் போது ஒரு தரப்பு விவசாயிகள் செங்கோட்டையை முற்றுகையிட்டு அங்கு காலியாக இருந்த கொடி கம்பத்தில் விவசாயிகள் கொடியை ஏற்றனர். அது பிரிவினைவாத கொடி என்று வதந்தி பரப்பப்பட்டது. 

விவசாயிகள் மத்தியில் ஊடுருவிய பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்தான் வன்முறைக்குக் காரணம் என்று கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து பா.ஜ.க-வினர் வன்முறையில் ஈடுபட்ட காட்சி என்று பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. தேசியக் கொடியை இறக்கிவிட்டு, பா.ஜ.க கொடியை ஏற்றிய விவசாயிகள் என்று குறிப்பிட்டு இந்த படம் பகிரப்படவே இது பற்றி ஆய்வு செய்தோம்.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த புகைப்படம் 2013ம் ஆண்டு முதல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் செய்தி நமக்குக் கிடைத்தது. ஆனால், முன்னணி ஊடகங்கள் எதிலும் இந்த புகைப்படம் பதிவிட்டதாக எந்த பதிவும் கிடைக்கவில்லை.

https://twitter.com/Yr_Conscience/status/411835612182757376

Archive

வேறு வேறு தேடுதளங்களில் இந்த புகைப்படத்தை பதிவேற்றித் தேடினோம்.  tineye.com என்ற தளத்தில் இந்த புகைப்படத்தை பதிவேற்றித் தேடியபோது கெட்டி இமேஜஸ் இந்த புகைப்படத்தை விற்பனைக்கு வைத்திருப்பது நமக்கு தெரியவந்தது.

அந்த தளத்துக்கு சென்று பார்த்தபோது, இந்த புகைப்படம் 2011ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானாவை பிரிக்க வேண்டும் என்று நடந்த லட்சக்கணக்கானோர் பேரணியின் போது எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர். 

அசல் பதிவைக் காண: gettyimages.in I Archive

நம்முடைய ஆய்வில், இந்த புகைப்படம் 2013ம் ஆண்டு முதல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த புகைப்படம் 2011ம் ஆண்டு தனி தெலங்கானா அமைக்கக் கோரி நடந்த போராட்டத்தின் போது எடுக்கப்பட்டதாக கெட்டி இமேஜஸ் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 2021 டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது தேசியக் கொடியை அகற்றிவிட்டு பா.ஜ.க கொடியை ஏற்றிய பா.ஜ.க தொண்டர்கள் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

டெல்லியில் தேசியக் கொடியை அகற்றிவிட்டு தங்கள் கட்சிக் கொடியை ஏற்றிய தேச விரோத விவசாயிகள் என்று பகிரப்படும் படம் 2011ம் ஆண்டு தெலங்கானா போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:விவசாயிகள் போராட்டத்தில் தேசியக் கொடியை அகற்றி பா.ஜ.க கொடி ஏற்றப்பட்டதாகப் பரவும் பழைய படம்!

Fact Check By: Chendur Pandian 

Result: False