
கர்நாடகாவில் ரயிலை கவிழ்க்க நடந்த சதி முறியடிக்கப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive
ரயில் தண்டவாளத்தில் கல்லை வைத்து மாட்டிய சிறுவனின் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கர்நாடகாவில் கையும் களவுமாக மாட்டிய சிறுவர்கள்.. தீர விசாரிக்க வேண்டிய செயல் இது.. ரயிலை தடம் புரளச் செய்ய இது போல் எவ்வளவு பேர் கிளம்பி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோவை P Chellapandi P Chellapandi என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஜூலை 5ம் தேதி பதிவிட்டுள்ளார்.
Rama Ram என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் இதே வீடியோவை பகிர்ந்துள்ளார். நிலைத் தகவலில், “கர்நாடகாவில் சிருவர்களால் நடக்கும் விபரீதம்,,
இதற்க்கு எவன்டா மத்திய அரசை குறை கூறுறது,, திராவிட ஓநாய் கூட்டமே,, உனக்கு இதை வைத்தே அரசியலில் ஆதாயம் தேடடுறாய் மானங்கெட்ட மடயனே,,” என்று குறிப்பிட்டுள்ளார்.
உண்மை அறிவோம்:
இந்தியா முழுக்க ரயில்களை கவிழ்க்க சதி நடப்பது போலவும், கர்நாடகாவில் நடந்த சதி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது போலவும் பலரும் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஒடிசா ரயில் விபத்துக்குப் பிறகு சமூக ஊடகங்களில் பரவும் இது போன்ற வீடியோக்கள் மிகப் பெரிய அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்துகின்றன. இந்த வீடியோ உண்மையானது போல உள்ளது. இது சித்தரிக்கப்பட்டது போல இல்லை. அதே நேரத்தில் ஒடிசா ரயில் விபத்துக்குப் பிறகு நடந்ததா என்று ஆய்வு செய்தோம்.
இந்த வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடல் உள்ளிட்ட இமேஜ் தேடல் தளங்களில் பதிவேற்றித் தேடினோம். ஆனால், ஒடிசா ரயில் விபத்துக்குப் பிறகு இப்படி சம்பவம் நடந்ததாக எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. ஆனால், இந்த வீடியோவை செய்தி ஊடகங்கள் பலவும், நெட்டிசன்கள் பலரும் தொடர்ந்து பதிவிட்டு வருவதைக் காண முடிந்தது. ஆனால், இந்த சம்பவம் கர்நாடகாவில் எங்கு, எப்போது நடந்தது என்று யாரும் குறிப்பிடவில்லை.

உண்மைப் பதிவைக் காண: Facebook
தொடர்ந்து தேடிய போது 2018ம் ஆண்டு இந்த வீடியோவை சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தெரிந்தது. அதன் அடிப்படையில் சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடிய போது, dtnext.in உள்ளிட்ட ஊடகங்களில் இது தொடர்பாக செய்தி வெளியாகி இருப்பது தெரிந்தது. அதில், கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் ரயில்வே போலீசார் இந்த சம்பவம் 2018ல் நடந்தது என்று உறுதி செய்தனர் என்றும், அருகில் உள்ள குடிசைப்பகுதியைச் சார்ந்த சிறுவர்கள் விளையாட்டாக இப்படி செய்ததாகவும், ரயிலைக் கவிழ்க்கும் உள்நோக்கம் அவர்களுக்கு இல்லை என்றும், இனி இவ்வாறு செய்யக்கூடாது என்று ரயில் பாதை பராமரிப்பாளர் எச்சரிக்கை செய்து, சிறுவர்களை அனுப்பியதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

உண்மைப் பதிவைக் காண: dtnext.in I Archive
இதன் மூலம் பழைய வீடியோவை எடுத்து வந்து, ஒடிசா சம்பவத்துக்கு காரணத்தைக் கற்பிக்க முயற்சி செய்திருப்பது தெரிகிறது. சிறுவர்கள் தவறாக ரயில் பாதையில் கல்லை வைத்து விளையாடிய வீடியோவை தவறாக, மிக மோசமான பின்னணி இருப்பது போன்று தவறாகப் பகிர்ந்திருப்பது இதன் மூலம் தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
2018ல் சிறுவர்கள் ரயில் தண்டவாளத்தில் கல் வைத்த வீடியோவை ரயிலை கவிழ்க்க தற்போது சதி நடந்தது போன்று சமூக ஊடகங்களில் தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:கர்நாடகாவில் ரயிலைக் கவிழ்க்க சதி என்று பரவும் வீடியோ எப்போது எடுக்கப்பட்டது தெரியுமா?
Written By: Chendur PandianResult: Misleading
