FACT CHECK: புதிய தலைமுறை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டதாக பரவும் வதந்தி!

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

புதிய தலைமுறை தொலைக்காட்சி மூடப்படும் என்று அதன் நிறுவனர் பச்சமுத்து கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. அதில், “புதிய தலைமுறை தொலைக்காட்சி விரைவில் மூடப்படும். நிறுவனர் பச்சைமுத்து அறிவிப்பு” என்று இருந்தது.

இந்த பதிவை சதீஷ் குமார் என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்டவர் 2021 நவம்பர் 15ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

புதிய தலைமுறை, தந்தி டிவி, நியூஸ் 7 தமிழ், சன் நியூஸ் என தமிழின் முன்னணி ஊடகங்கள் வெளியிடும் நியூஸ்கார்டுகளை எடிட் செய்து வதந்தி பகிர்வது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் புதிய தலைமுறை தொலைக்காட்சியை மூடப்போவதாக அதன் உரிமையாளர் கூறியதாக, மேற்கண்ட நியூஸ் கார்டை சிலர் பகிர்ந்து வருகின்றனர்.

தங்கள் ஆதரவு செய்தியை மட்டுமே ஊடகங்கள் வெளியிட வேண்டும் என்ற எண்ணம் எல்லா கட்சிகளிடமும் உள்ளது. தங்களுக்கு எதிரான செய்தியை வெளியிட்டாலே அந்த ஊடகங்கள் மீது பாயும் போக்கும் அதிகரித்துக்கொண்டே செல்வதை இந்த நியூஸ் கார்டு வெளிப்படுத்துகிறது. இந்த நியூஸ் கார்டு உண்மையானது இல்லை. எனவே, இது போலியானத என்பதை உறுதி செய்வதற்கான ஆய்வை நடத்தினோம். 

அசல் பதிவைக் காண: affidavit.eci.gov.in

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நிறுவனர் பெயர் பச்சமுத்து ஆகும். அதை பாரிவேந்தர் என்று மாற்றிவிட்டார். 2021 நாடாளுமன்றத் தேர்தலில் பாரிவேந்தர் என்றுதான் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் பச்சைமுத்து என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அவர், தாக்கல் செய்த வேட்புமனுவில் தன்னுடைய பெயரை பச்சமுத்து என்று குறிப்பிட்டுள்ளார். அப்படி இருக்கும்போது புதிய தலைமுறை அவருடைய பெயரை பச்சைமுத்து என்று தவறாக குறிப்பிட வாய்ப்பு இல்லை. 

அசல் பதிவைக் காண: elections.tn.gov.in

இந்த நியூஸ் கார்டில் இருந்த தமிழ் ஃபாண்ட் வழக்கமான புதிய தலைமுறை பயன்படுத்தும் நியூஸ் கார்டில் உள்ளது போல் இல்லை. பின்னணி டிசைன் மற்றும் வாட்டர் மார்க் லோகோ இல்லை. இவை இந்த நியூஸ் கார்டு போலியாக உருவாக்கப்பட்டது என்பதை உறுதி செய்தன.

2021 நவம்பர் 14ம் தேதி புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம். அதில் புதிய தலைமுறை மூடப்படும் என்று அதன் உரிமையாளர் கூறியதாக எந்த நியூஸ் கார்டும் இல்லை. எனவே, புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சரவணனைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், புதிய தலைமுறை தொலைக்காட்சி விரைவில் மூடப்படும் என்று பச்சமுத்து கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிபரப்பை நிறுத்தப் போவதாக அதன் நிறுவனர் பாரிவேந்தர் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:புதிய தலைமுறை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டதாக பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False