விமானத்தின் மீது தமிழில் பெயரை எழுதுவோம் என்று விமான நிறுவனம் அறிவித்ததா?

சமூக ஊடகம் | Social சமூகம் தமிழ்நாடு | Tamilnadu

விமானத்தில் தங்கள் நிறுவனத்தின் பெயரை தமிழில் எழுத உள்ளதாக ரயானி ஏர் அறிவித்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

விமானத்தின் மீது Rayani Air என்று ஆங்கிலத்திலும் ரயானி ஏர் எனத் தமிழிலும் எழுதப்பட்டிருப்பதாக ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதனுடன், “உலகிலேயே முதல் முறையாக விமானத்தில் தமிழ் எழுத்து. மலேசியா விமான நிறுவனம் ரயானி ஏர் அறிவிப்பு. தமிழால் இணைவோம்!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Power Shine Rahmathullah என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் இந்த புகைப்பட பதிவை 2022 நவம்பர் 5ம் தேதி பதிவிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ரயானி ஏர் என்று ஏதும் விமான நிறுவனம் இருப்பதாகவோ, தமிழில் பெயர் எழுதப்போவதாக அறிவிப்பு வெளியிட்டதாகவோ எந்த ஒரு செய்தியும் இல்லாத நிலையில், ஃபேஸ்புக்கில் பலரும் இதைப் பகிர்ந்து வரவே, அது பற்றி ஆய்வு செய்தோம். ரயானி ஏர் என்று ஏதேனும் நிறுவனம் உள்ளதா என்று பார்த்தோம். அப்போது, பல ஆண்டுகளுக்கு முன்பு அப்படி ஒரு விமான நிறுவனம் செயல்பட்டது தெரிந்தது. 

அந்த விமான நிறுவனம் பற்றி ஆய்வு செய்தோம். அந்த விமான நிறுவனத்தின் இணையதளம் தற்போது செயல்பாட்டில் இல்லை. ஆனால், ஃபேஸ்புக் பக்கம் மட்டும் இருந்தது. தொடர்ந்து தேடிய போது, மலேசியாவில் ரயானி ஏர் என்ற நிறுவனம் கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டதாகச் செய்திகள் கிடைத்தன. முழுக்க முழுக்க இஸ்லாமியர்களின் ஷரியா சட்டத்துக்கு உட்பட்டு செயல்படும் வகையில் இந்த விமான நிறுவனத்தை மலேசிய வாழ் தமிழர்களான ரவி மற்றும் அவரது மனைவி கார்த்தியானி ஆகியோர் 2015ம் ஆண்டு தொடங்கினர் என்று செய்திகள் தெரிவித்தன.

உண்மைப் பதிவைக் காண: thehindu.com I Archive

சேவை தொடங்கி ஒரு சில மாதங்களிலேயே நிறுவனம் மூடப்பட்டதாகச் செய்திகள் கிடைத்தன. போதுமான நிதி ஆதாரம் மற்றும் நிர்வாகத் திறன் இல்லாத காரணத்தால் விமான சேவை வழங்க அளிக்கப்பட்ட நிபந்தனைகளை அந்த நிறுவனம் மீறியதால் அதற்கான உரிமத்தை மலேசிய விமான போக்குவரத்து ஆணையம் ரத்து செய்ததாக 2016ல் வெளியான செய்திகள் தெரிவித்தன. 2015 டிசம்பர் 20ம் தேதி தொடங்கிய சேவை ஏப்ரல் 9, 2016ல் நிறுத்தப்பட்டது என்று தெரியவந்தது. 2016 ஜூலை 13ம் தேதி இந்த விமான நிறுவனம் செயல்பட முழுத் தடை விதிக்கப்பட்டது. 

இஸ்லாமிய முறைப்படி செயல்படும் விமான நிறுவனம் என்று அறிவிக்கப்பட்டாலும், தமிழுக்கு அதன் உரிமையாளர்கள் முன்னுரிமை அளிக்கும் வகையில் ஏதேனும் அறிவிப்பு வெளியிட்டார்களா என்று பார்த்தோம். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. மேலும், அந்த விமான நிறுவனத்தின் நிறுவனர் ரவி என்பவரின் ட்விட்டர், இன்ஸ்டா பக்கங்களைப் பார்வையிட்டோம். 2016ம் ஆண்டு வரை அவர் ட்வீட் செய்திருந்தார். தமிழில் பெயர் எழுதப்படும் என்று எந்த ஒரு அறிவிப்பையும் அவர் அதில் வெளியிடவில்லை. அதே போல் ரயானி ஏர் ட்விட்டர் பக்கத்திலும் அது போன்று எந்த ஒரு அறிவிப்பும் இல்லை.

உண்மைப் பதிவைக் காண: tamilmurasu.com.sg I Archive

நம்முடைய ஆய்வில், 2015-16ல் ரயானி ஏர் என்ற நிறுவனம் செயல்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. தொடங்கிய நான்கு மாதங்களில் அந்த நிறுவனம் செயல்பாட்டை நிறுத்தியிருப்பதும், அதன் உரிமத்தை மலேசிய விமான போக்குவரத்து ஆணையம் ரத்து செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. அந்த நிறுவனம் செயல்பட்ட நான்கு மாத காலத்தில் தமிழில் பெயர் எழுதப்படும் என்று அவர்கள் அறிவித்ததாக எந்த ஒரு செய்தியும் இல்லை. 2015ல் தொடங்கப்பட்டு 2016ல் மூடப்பட்ட விமான நிறுவனத்தின் பெயரை வைத்து வதந்தி பரப்பி வந்திருப்பது தெளிவாகிறது. இதன் மூலம் முதன் முறையாக விமானத்தின் மீது தமிழ்ப் பெயர் எழுதப்பட உள்ளது என்று பரவும் பதிவு தவறானது என்பது உறுதியாகிறது.

முடிவு:

தன்னுடைய விமானத்தின் மீது தமிழில் பெயரை எழுதப்போவதாக ரயானி ஏர் அறிவித்தது என்று பரவும் தகவல் தவறானது, அந்த நிறுவனம் 2016லேயே தன்னுடைய செயல்பாட்டை நிறுத்திக் கொண்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:விமானத்தின் மீது தமிழில் பெயரை எழுதுவோம் என்று விமான நிறுவனம் அறிவித்ததா?

Fact Check By: Chendur Pandian 

Result: False