சபரிமலையில் அரவணை பாயசம் தயாரிக்கும் இடத்திற்குள் சிறுத்தை நுழைந்ததா?

இந்தியா | India சமூக ஊடகம் | Social சமூகம்

சபரிமலையில் அரவணை பாயசம் தயாரிக்கும் இடத்திற்குள் சிறுத்தை ஒன்று நுழைந்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தொழிற்சாலை போன்று இருக்கும் இடத்திற்குள் சிறுத்தை ஒன்று நுழைந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சபரிமலை அரவைண பிரசாதம் தயாரிக்கும் இடத்தில் சிறுத்தை புலி..!! சுவாமியே சரணம் ஐயப்பா”  என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவை Mani Kandan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஜனவரி 11ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சபரி மலையில் அரவணை பாயசம் தயாரிக்கும் இடத்துக்குள் சிறுத்தை நுழைந்ததாக வீடியோ பகிரப்பட்டு வருகிறது. சபரிமலை சீசன் உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில் சிறுத்தை நுழைந்தது என்ற தகவல் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. சபரிமலையில் அப்படி ஏதும் நிகழ்ந்திருந்தால் அது பற்றிய செய்தி வெளியாகி இருக்கும். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் இல்லாத சூழலில் இந்த வீடியோ தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

வீடியோவை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோவை பலரும் கேரளாவில் ஒரு ஹோட்டலில் நிகழ்ந்தது என்று பதிவிட்டிருப்பது தெரிந்தது. தொடர்ந்து தேடிய போது, தெலுங்கு ஊடகங்கள் சில இந்த வீடியோவை கடந்த மாதம் (டிசம்பர் 2022) வெளியிட்டிருப்பது தெரிந்தது. தெலங்கானாவில் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைக்குள் சிறுத்தை புகுந்தது என்று குறிப்பிட்டிருந்தனர்.

உண்மைப் பதிவைக் காண: telanganatoday.com I Archive 1 I indiatimes.com I Archive 2

இதன் அடிப்படையில் சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடினோம். அப்போது, தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள ஒரு பார்மாசூட்டிக்கல் தொழிற்சாலைக்குள் சிறுத்தை புகுந்தது. இது பற்றி வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் வந்து சிறுத்தையைப் பிடித்துச் சென்றனர்” என்று குறிப்பிட்டிருந்தனர். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ காட்சி மற்றும் கூடுதல் காட்சிகளை செய்தி ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.

நம்முடைய ஆய்வில் இந்த வீடியோ தெலங்கானாவில் ஒரு மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அரவணை பாயசம் தயாரிக்கும் இடத்திற்குள் சிறுத்தை நுழைந்தது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதியாகிறது.

முடிவு:

சபரிமலையில் அரவணை பாயசம் தயாரிக்கும் இடத்திற்குள் சிறுத்தை நுழைந்தது என்று பரவும் வீடியோ தெலங்கானாவில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:சபரிமலையில் அரவணை பாயசம் தயாரிக்கும் இடத்திற்குள் சிறுத்தை நுழைந்ததா?

Fact Check By: Chendur Pandian 

Result: False