தமிழகத்தில் சமூக நீதிக்கு இடமில்லை என்று திருமாவளவன் கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

தமிழகத்தில் சமூக நீதிக்கு இடமில்லை என்று தொல் திருமாவளவன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

தொல் திருமாவளவன் புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழகத்தில் சமூக நீதிக்கு இடமில்லை. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த சுதந்திரப் போராட்ட தியாகியான இரட்டைமலை சீனிவாசன், குயிலி போன்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த யாரும் தமிழக அரசு அலங்கரித்த குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது. விசிக தலைவர் திருமாவளவன்” என்று இருந்தது.

இந்த பதிவை நீலகுரல் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜனவரி 20ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சில நாட்களாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் ஐடி விங் மிக வேகமாக செயல்பட்டு வருகின்றன. இதனால் சமூக ஊடகங்களில் பல்வேறு போலியான நியூஸ் கார்டுகள் மிகவும் வைரலாக பரப்பப்பட்டு வருகின்றன. அவை பற்றித் தொடர்ந்து நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ கட்டுரை வெளியிட்டு வருகிறது.

இந்த சூழலில் தமிழகத்தில் சமூக நீதிக்கு இடமில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் குற்றம்சாட்டியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த நியூஸ் கார்டில் உள்ள தமிழ் ஃபாண்ட் புதிய தலைமுறை வெளியிடும் வழக்கமான நியூஸ் கார்டு போல இல்லை. எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் ஜனவரி 18ம் தேதி இந்த நியூஸ் கார்டு வெளியிடப்பட்டது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே, புதிய தலைமுறை ஃபேஸ்புக் பக்கத்தில் ஜனவரி 18ம் தேதி வெளியான நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். அப்போது, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் புகைப்படத்துடன் ஒரு நியூஸ் கார்டு வெளியாகி இருந்தது. ஆனால், அதில் மேயரை மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் முறை தேவை என்று தொல் திருமாவளவன் கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நியூஸ் கார்டை எடுத்து எடிட் செய்து வெளியிட்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது. இருப்பினும் இதை உறுதி செய்ய புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் ராசுஸை தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இது போலியான நியூஸ் கார்டுதான். நாங்கள் வெளியிட்ட நியூஸ் கார்டை எடிட் செய்து வெளியிட்டுள்ளனர் என்றார். இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்று உறுதியானது.

இந்த நியூஸ் கார்டில் உள்ள கருத்தை தொல் திருமாவளவன் வேறு எங்காவது தெரிவித்துள்ளாரா என்று கூகுளில் தேடிப் பார்த்தோம். நமக்கு அப்படி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. அவருடைய சமூக ஊடக பக்கங்களிலும் இப்படி எந்த ஒரு கருத்தையும் அவர் கூறியதாக இல்லை. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தமிழ்நாட்டில் சமூக நீதி இல்லை என்று தொல் திருமாவளவன் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:தமிழகத்தில் சமூக நீதிக்கு இடமில்லை என்று திருமாவளவன் கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False