
சீன வங்கிகள் திவால் ஆனதற்கு மோடிதான் காரணம் என்று திருமாவளவன் ட்வீட் செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
தொல் திருமாவளவன் வெளியிட்ட நியூஸ் கார்டுக்கு ஒருவர் பதில் அளித்தது போன்று ஸ்கிரீன்ஷாட் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், தொல் திருமாவளவன் வெளியிட்டதாகக் கூறப்படும் ட்வீட்டில், “சீனாவில் சனாதன பாசிச மோடி அரசின் ஆட்சியில் சர்வாதிகார போக்கினால் சீன வங்கிகள் திவால் 1000 யுவான்க்கு மேல் பனம் எடுக்க தடை!! சர்வதிகாரி மோடி” என்று இருந்தது. இதற்கு Ramg என்ற ஐடி கொண்டவர் பதில் அளித்துள்ளார். அதில், “சீனா திவால் ஆச்சுன்னா உமக்கு ஏன் ஐயா எரியுது.. நீரெல்லாம் ஒரு MP. கேடு கெட்ட சிதம்பரம் தொகுதி மக்கள்..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த ஸ்கிரீன்ஷாட்டை Pon Hariraj Hari என்பவர் 2021 ஜூலை 22ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சீனாவில் வங்கி திவால் ஆனால் அதற்கு ஏன் நரேந்திர மோடியை விமர்சிக்கப் போகிறார்கள். இந்த அடிப்படை புரிதல் கூட இன்றி திருமாவளவன் ட்வீட் போட்டார் என்தே நம்பும்படி இல்லை. மேலும், நான்கு வரி ட்வீட் பதிவில் ஏகப்பட்ட பிழைகள் வேறு. ஆட்சியின் என்று வருவதற்கு பதில் ஆட்சியில் என்று குறிப்பிட்டுள்ளனர், பணம் என்பதற்கு பதில் பனம் என்று குறிப்பிட்டுள்ளனர். சர்வாதிகாரி என்பதை சர்வதிகாரி என்று குறிப்பிட்டுள்ளனர். எனவே இது நிச்சயம் தொல் திருமாவளவனின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஐடியாக இருக்காது என்பது தெரிந்தது.
மேலும், ட்விட்டர் அக்கவுண்டில் official என்பது தவறாக இருந்தது. @thirumaoffical என தவறாக இருந்தது. இதன் மூலம் யாரோ தொல் திருமாவளவன் பெயரில் போலியாக ட்விட்டர் அக்கவுண்டை உருவாக்கி பதிவிட்டு வருவது உறுதியானது. இதை உறுதி செய்துகொள்ள திருமாவளவன் ட்விட்டர் பக்கத்தை ஆய்வு செய்தோம்.

அசல் பதிவைக் காண: Twitter I Archive
அதில், Thol.Thirumavalavan @thirumaofficial என்று இருந்தது. அதில் சீன வங்கி பற்றி எந்த ஒரு பதிவும் இல்லை. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட @thirumaoffical அக்கவுண்ட் பக்கத்தை பார்த்தோம். அந்த பக்கம் ட்விட்டரில் இருந்து நீக்கப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: Twitter I Archive
இதன் மூலம் திருமாவளவன் பெயரில் போலியாக ட்வீட் பதிவிட்டு, அதற்கு எதிராக பொங்கி, அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து விஷமத்தனமாக பகிர்ந்து வருவது உறுதியானது. இதன் அடிப்படையில் சீன வங்கி திவால் தொடர்பாக பிரதமர் மோடியை திருமாவளவன் விமர்சித்ததாக சமூக ஊடகங்களில் பரவும் பதிவு தவறானது என்று முடிவு செய்யப்படுகிறது.
முடிவு:
சீன வங்கி திவால் பற்றி திருமாவளவன் ட்வீட் செய்தார் என்று பரவும் ஸ்கிரீன்ஷாட் போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:சீன வங்கிகள் திவால்; மோடியை கண்டித்து ட்வீட் வெளியிட்டாரா திருமாவளவன்?
Fact Check By: Pankaj IyerResult: False
