
சென்னை மெரினா கடற்கரையில் மாண்டஸ் புயல் காரணமாக மழை நீர் சூழ்ந்த காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
சென்னை மெரினா கடற்கரையில் மழை நீர் தேங்கியிருக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மாண்டஸ் புயல் காரணமாக நேற்று பெய்த பலத்த மழையால் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை மழைநீர் சூழ்ந்தது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோவை NewsM என்ற ஃபேஸ்புக் பக்கம் டிசம்பர் 10, 2022 அன்று பதிவிட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook
குமுதம் இதழ் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இதே வீடியோவை டிசம்பர் 9, 2022 அன்று பதிவிட்டுள்ளது. நிலைத் தகவலில், “அண்ணா சதுக்கத்தை எட்டிப்பார்த்த கடல்நீர்
இன்று மாலை சென்னை அண்ணா சதுக்கம் அருகே வரை கடல் நீர் புகுந்தது” என்று குறிப்பிட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சென்னை அருகே மாண்டஸ் புயல் கரை கடந்ததால் சென்னை சிறிது பாதிப்புகளை சந்தித்தது. இந்த நிலையில், மாண்டஸ் புயல் காரணமாக ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தில் மெரினா கடற்கரை பாதிக்கப்பட்டது என்று ஒரு வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். செய்தி தொலைக்காட்சிகள் சென்னை மெரினா கடற்கரையில் இருந்து நேரடி ஒளிபரப்பு செய்தன. ஆனால், அவற்றில் எல்லாம் இப்படி ஒரு நிலையைக் காணவில்லை என்பதால் சந்தேகத்தின் அடிப்படையில் இந்த வீடியோவை ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இது 2021ம் ஆண்டு மழை வெள்ள வீடியோ என்று தெரிந்தது. ஊடகவியலாளர் ஒருவர் இந்த வீடியோவை 2021 நவம்பரில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதை வைத்து ஆங்கில ஊடங்களிலும் கூட செய்தி வெளியாகி இருப்பதை காண முடிந்தது. அதைத் தொடர்ந்து பலரும் இந்த வீடியோவை 2021-ல் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது.
2021 நவம்பரில் சென்னையில் கன மழை பெய்தது. அப்போது சென்னை கடற்கரையில் மழை நீர் தேங்கியிருந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது. வீடியோவுடன் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அந்த வீடியோவை இப்போது வெளியிட்டுள்ளனர். நம்முடைய ஆய்வில் மாண்டஸ் புயல் காரணமாக சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ 2021ல் எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மெரினாவில் தேங்கிய மழை நீர் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
2021 வீடியோவை எடுத்து 2022 மாண்டஸ் புயல் பாதிப்பு காரணமாக கடல் போல் காட்சியளிக்கும் சென்னை மெரினா கடற்கரை என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:மெரினாவில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்பு என்று பரவும் பழைய வீடியோ!
Fact Check By: Chendur PandianResult: Partly False
