
அம்பேத்கர் தொடர்பான நூல் வெளியீட்டு விழாவில் தவெக தொண்டர்களை நடிகர் விஜய் அழைத்தது போன்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
நடிகர் விஜய் மற்றும் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ் என இரண்டையும் ஒன்றாக்கி புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “தவெக தொண்டர்களுக்கு அழைப்பு! நாளை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய்யத்தில் நடிகர் தவெக தலைவர் விஜய் வெளியிட்டு முன்னாள் நீதிபதி சந்துரு பெற்றுக்கொள்ளும் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவிற்கு தவெக தொண்டர்கள் கலந்துகொள்ள அழைப்பு. அனுமதி இலவசம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அம்பேத்கர் தொடர்பான நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற உள்ளது. நடிகர் விஜய் இதில் பங்கேற்று நூலை வெளியிடுகிறார். நடிகர் விஜய் அரசியல் கட்சித் தலைவரான பிறகு பொதுவெளியில் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால் இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த நிலையில் தவெக தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு விடுத்தது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. ஆனால், யார் அழைத்தார்கள் என்று குறிப்பிடப்படவில்லை. நடிகர் விஜய் கைகூப்பி அழைப்பது போன்ற படம் இருப்பதால் நடிகர் விஜய் அழைத்தது போலவே கருதி விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக ஆதரவாளர்கள் இந்த நியூஸ் கார்டை வைரலாக பகிர்ந்து வருகின்றனர். எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
முதலில் விஜய்யின் தவெக கட்சி எக்ஸ் தள பக்கத்தில் அழைப்பு ஏதும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். அதில் தொண்டர்கள் பங்கேற்க அழைப்பு எதுவும் வெளியாகவில்லை. அடுத்ததாக புதிய தலைமுறையில் இப்படி நியூஸ் கார்டு வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். ஆனால் அதிலும் அப்படி எந்த நியூஸ் கார்டும் இல்லை.
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
எனவே, இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை டிஜிட்டல் பொறுப்பாளருக்கு அனுப்பினோம். இது போலியானது என்று நம்மிடம் உறுதி செய்த அவர், ‘FAKE NEWS’ என்று முத்திரையுடன் இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை என்று குறிப்பிட்டு புதிய நியூஸ் கார்டு ஒன்றை நமக்கு அனுப்பினார்.
மேலும், சற்று நேரத்தில் புதிய தலைமுறையின் சமூக ஊடக பக்கங்களிலும் இந்த நியூஸ் கார்டு வெளியிடப்பட்டது. இதன் அடிப்படையில் தவெக தொண்டர்களுக்கு அழைப்பு என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
நூல்வெளியீட்டு விழாவில் பங்கேற்க தவெக தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு விடுத்தது போன்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:அம்பேத்கர் நூல் வௌியீட்டு விழாவில் பங்கேற்க தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு விடுத்தாரா?
Written By: Chendur PandianResult: False
