விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் தனி நாடு கோரிக்கை எழுப்பிய விவசாயிகள் என்று சமூக ஊடகங்களில் புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

"காலிஸ்தான் வேண்டும்" என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட காகிதத்தை சீக்கியர் ஒருவர் தூக்கிப்பிடிக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "விவசாயிகள் போர்வையில் போராளிகள். இவர்களையும் மத்திய அரசு "பெண்டு எடுக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

விவசாயிகள் என்ற போர்வையில் சமூக விரோதிகள் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தனி காலிஸ்தான் என்ற சீக்கியர்களுக்கான தனி நாடு கேட்டதாக சமூக ஊடகங்களில் புகைப்படம் பரப்பப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் பல ஆண்டுகளாகவே சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதால் இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2020ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி இந்த புகைப்படத்தை திவீக் என்ற ஆங்கில ஊடகம் வெளியிட்டிருப்பதைக் காண முடிந்தது. அதில் இந்த புகைப்படமானது ஏஎஃப்பி என்ற செய்தி நிறுவனத்தால் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: theweek.in I Archive 1 I zeenews.india.com I Archive 2

இதன் அடிப்படையில் தொடர்ந்து தேடிய போது gettyimages.in என்ற இணையதளத்தில் இந்த புகைப்படம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. அதில், "அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குள் இந்திய ராணுவம் நுழைந்து நடத்திய ப்ளு ஸ்டார் தாக்குதலின் 29ம் ஆண்டு நினைவு தினத்தை 2013ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி சீக்கியர்கள் அனுசரித்த போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: gettyimages.in 1 I Archive 1 I gettyimages.in 2 I Archive 2

இந்த புகைப்படம் 2013ம் ஆண்டு எடுக்கப்பட்டதாக gettyimages.in இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் விவசாயிகள் இல்லை என்பதும் ப்ளு ஸ்டார் ராணுவ தாக்குதல் நினைவு தினத்தை அனுசரித்த சீக்கியர்கள் என்பதும் உறுதியாகி உள்ளது. 2013ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தை 2024ம் ஆண்டு டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில் எடுக்கப்பட்டதாகத் தவறாகப் பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முடிவு:

விவசாயிகள் போராட்டத்தில் தனி காலிஸ்தான் கோரிக்கை போஸ்டர் ஏந்தியதாக பகிரப்படும் புகைப்படம் 2013ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:‘தனி நாடு கேட்ட விவசாயிகள்’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False