இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உடல் மெலிந்து ஒடுங்கிப்போய்விட்டார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

கபில் தேவ் மருத்துவமனையில் இருக்கும் பழைய புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "காலம் எவ்வளவு கொடுமையானது, எவ்வளவு இரக்கமற்றது என்பதும் எல்லாம் நிலையற்றது என்பதும் பல இடங்களில் அவ்வப்போது நினைவுக்கு வருமாறு வாழ்க்கை ஓடினாலும் இப்போதைய மிகபெரும் உதாரணம் கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ்..!

அந்த "ஹரியான சிங்கம்" 1980களில் எப்படி இருந்தது..? அது காட்டிய பாய்ச்சல் என்ன..? பந்து வீசிய அழகென்ன..? சிக்ஸர் அடித்த அந்த பலம் என்ன..? அந்த முகமும் கண்களும் காட்டிய தீர்க்கமென்ன..? அந்த கைகளும் விரலும் செய்த மாயாஜலம் என்ன..? எப்படியெல்லாம் கொண்டாடபட்டார் அந்த கபில், 1980களில் அவரை கடக்காமல் யாரும் சென்றிருக்க முடியாது, இன்றிருக்கும் கிரிக்கெட்டர்களில் யாரும் அவர் அடைந்த புகழில் கால்வாசி கூட வரமுடியாது.

இன்று மெலிந்துவிட்ட சிங்கமாக, ஒடுங்கிவிட்ட நதியாக‌ அவர் மருத்துவமனையில் இருப்பது மனதை ரணமாக்கும் காட்சி. எதுதான் இங்கு நிலையானது..? எதுதான் அழியாதது..? எதுதான் மாறாதது என்றால் எதுவுமில்லை.! ஹரியான சிங்கம்" நலமாக திரும்ப பிரார்த்திப்போம். படித்ததில் பிடித்தது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Memes சென்ட்ரல் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 மே 17ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

படித்ததில் பிடித்தது என்று குறிப்பிட்டு கபில் தேவ் பற்றிய பதிவை பகிர்ந்துள்ளனர். உடல் நலம் குறைந்து கபில் தேவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அங்கு அவர் மிகவும் தளர்ந்து போய் காணப்படுகிறார் என்றும், விரைவில் நலம் பெற்று அவர் வீடு திரும்ப வேண்டும் என்றும் பதிவில் குறிப்பிட்டுள்ளனர். இதைப் படிக்கும் போது, கபில் தேவ் தற்போது உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

இந்த புகைப்படம் பற்றித் தேடினோம். அப்போது, இந்த புகைப்படம் 2020ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று தெரிந்தது. இந்த படத்தை அவருக்கு ஆஞ்ஜியோபிளாஸ்டி சிகிச்சை அளித்த மருத்துவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் என்று செய்தி கிடைத்தது.

மேலும், மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கபில் தேவ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் என்றும் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. தன் மீது அன்பும் அக்கரையும் கொண்ட அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்" என்று குறிப்பிட்டு கபில் தேவ் ட்வீட் வெளியிட்டிருந்ததும் கிடைத்தது.

Archive 1 I indianexpress.com I Archive 2

தற்போது அவர் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா, அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். ஆனால், நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில், தற்போது கபில்தேவ் அமெரிக்காவில் இருப்பதாகவும் அங்கு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்திருப்பதாகவும் தகவல் கிடைத்தது. அதில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மருத்துவர், பொறியாளர் ஆக வேண்டும் என்று விரும்புகின்றனர். தங்கள் குழந்தை விளையாட்டு வீரராக வேண்டும் என்று நினைத்தால் நம்முடைய நாடு மிக அதிக அளவில் வெற்றியாளர்களை உருவாக்கலாம்" என்று கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் மூலம் 2020ல் கபில் தேவ் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட படத்தையும் செய்தியையும் இப்போது பகிர்ந்து கபில் தேவ் நலமுடன் திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருவது தெரிந்தது.

முடிவு:

கபில் தேவ் 2020ம் ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் மற்றும் படத்தை இப்போது நிகழ்ந்தது போல் தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:கபில்தேவ் 2020ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு தற்போது வருந்தும் நெட்டிசன்கள்!

Fact Check By: Chendur Pandian

Result: False