தெலங்கானாவில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டதா துணை ராணுவம்?
தெலங்கானாவில் கடந்த 2021ம் ஆண்டு வெள்ளத்தில் மூழ்கிய ஜேசிபி இயந்திரத்தில் சிக்கியவர்களை துணை ராணுவம் ஹெலிகாப்டர் மூலம் மீட்ட வீடியோவை தற்போது நடந்தது போன்று பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
மழை வெள்ளத்தில் சிக்கிய ஜேசிபி வாகனத்துக்குள் இருந்தவர்களை மீட்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், "தெலங்கானாவில் கடும் வெள்ளப்பெருக்கு - ஆற்றில் ஜேசிபி வாகனத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்ட துணை ராணுவம்.. பதபதைக்கவைக்கும் காட்சி...!" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை Polimer News என்ற ஃபேஸ்புக் பக்கம் 2022 ஜூலை 14ம் தேதி வெளியிட்டுள்ளது.
உண்மைப் பதிவைக் காண: Facebook
இதே போன்று V News27 என்ற ஊடகமும் இந்த வீடியோவை யூடியூப், ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது. அதில் கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மஞ்செரியல் மாவட்டத்தில் ஜேசிபி இயந்திரத்தில் சென்ற இரண்டு பேர் வெள்ளத்தில் மாட்டிக்கொண்டனர். அவர்களை துணை ராணுவப் படையினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்டர் என் குறிப்பிட்டிருந்தனர். இந்த வீடியோவை 2022 ஜூலை 15ம் தேதி அவர்கள் வெளியிட்டிருந்தனர். பலரும் இந்த வீடியோவை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
உண்மை அறிவோம்:
தெலங்கானாவில் வெள்ளப்பெருக்கு, ஜேசிபி வாகனத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்ட துணை ராணுவம் என்று பாலிமர் நியூஸ் செய்தி - வீடியோ வெளியிட்டிருந்தது. பலரும் இது பழைய செய்தி என்று குறிப்பிட்டிருந்தனர். எனவே, இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம்.
உண்மைப் பதிவைக் காண: ndtv.com I Archive
வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோவை பல ஆங்கில ஊடகங்கள் 2022ம் ஆண்டு ஜூலை மாதத்தில் வெளியிட்டிருந்தன. தொடர்ந்து பின்னோக்கி தேடிய போது, 2021ம் ஆண்டிலேயே இதே வீடியோவை பல முன்னணி ஊடகங்களும் வெளியிட்டிருப்பதைக் காண முடிந்தது. நாம் தற்போது ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவும், இந்த வீடியோவும் வேறு வேறு இடங்களில் இருந்து எடுக்கப்பட்டதாக இருந்தது. இரண்டும் ஒன்றாக இருக்கலாம் என்றாலும் உறுதியான ஆதாரம் கிடைக்கத் தொடர்ந்து தேடினோம்.
யூடியூபில் வேறு வேறு கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடியபோது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட அதே வீடியோ 2021 நவம்பர் மாதம் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. அதில், ஆந்திர மாநிலம் அன்னமய்யா நீர்த்தேக்க திட்டத்தில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில் சிக்கிய ஜேசிபி இயந்திரத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் என்று குறிப்பிட்டிருந்தனர்.
தொடர்ந்து தேடிய போது இந்திய விமானப்படை இந்த மீட்பு சம்பவத்தின் புகைப்படம் மற்றும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டிருந்தது தெரிந்தது. அதில், ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் சித்ராவதி நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய மக்களை இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மீட்டது என்று குறிப்பிட்டிருந்தனர்.
இதன் மூலம், கடந்த 2021ம் ஆண்டு நம்பர் மாதம் ஆந்திர மாநிலத்தில் நடந்த மீட்பு சம்பவத்தின் வீடியோவை, 2022 ஜூலையில் தெலங்கானாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய ஜேசிபி என்று தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஆந்திரப் பிரதேசத்தில் 2021ம் ஆண்டு வெள்ளத்தில் சிக்கிய ஜேசிபி வாகனத்தில் இருந்தவர்களை மீட்ட வீடியோவை 2022 தெலங்கான வெள்ளக் காட்சி என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:தெலங்கானாவில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டதா துணை ராணுவம்?
Fact Check By: Chendur PandianResult: False