தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் குழந்தை ராமர் சிலையை ஏந்தி போட்டோவுக்கு போஸ் கொடுத்ததாகவும், தமிழ் நடிகர்களுக்கு அல்லு அர்ஜுன் போல தேசப் பற்று, ஆன்மிக பற்று இல்லை என்றும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

அயோத்தியில் நிறுவப்பட்ட குழந்தை ராமர் சிலை போன்ற சிறிய அளவிலான சிலையை தெலுங்கு திரைப்பட நடிகர் அல்லு அர்ஜூன் ஏந்தி நிற்பது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் ஜனவரி 29, 2024 அன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "வாழ்த்துக்கள் அல்லு அர்ஜீன் ஜீ தெலுங்கு நடிகர் தான் உண்மையான ஹீரோக்கள் இந்துக்கள்.. தமிழக நடிகர்களே இவர்களின் தேசபற்றையும் ஆன்மீக பற்றையும் பார்த்துட்டு செத்துருங்கடா.. நீங்கள் உயிரோட இருந்து மக்களுக்கும் தேசத்திற்கும் எந்த ஒரு பயனுமில்ல.." என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ் திரைப்பட உலகில் பலரும் அயோத்தி ராமர் கோவில் தொடர்பாக ஆதரவு கருத்தை வெளியிட்டும், நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக அயோத்திக்கு சென்று வந்த பிறகும் கூட தமிழ் நடிகர்களை கடுமையாக விமர்சித்துள்ளனர். ராமர் சிலையை ஏந்தினால் மட்டும்தான் தேசப்பற்று, ஆன்மிகப் பற்று என்று சமூக ஊடகங்களில் விஷத்தைக் கக்கி வருகின்றனர்.

தெலுங்கு நடிகர் ஒருவர் ராமர் சிலையை கையில் ஏந்தி போட்டோவுக்கு போஸ் கொடுத்ததால், தமிழ்நாட்டு நடிகர்கள் செத்துப்போய்விடலாம் என்று மிகக் கடுமையாக விமர்சித்து பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த புகைப்படம் உண்மையாக இருந்தால் ராமர் சிலையை கையில் ஏந்தும் நடிகர் அல்லு அர்ஜுன் நெற்றில் திருநீறு பூசுவதற்குப் பதில் விஷ்ணுவுக்குரிய திருநாமம் இட்டிருப்பார். ராமர் சிலையின் பின்புறம் அப்பட்டமாக போட்டோஷாப் மூலம் மறைத்திருப்பது தெரிகிறது. எனவே, இந்த புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.

இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடிய போது பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான தெலுங்கு திரைப்படம் ஒன்றின் புகைப்படத்தை எடிட் செய்திருப்பது தெரிந்தது. துவ்வாடா ஜகன்னாதம் (DJ Duvvada Jagannadham) என்ற தெலுங்கு திரைப்படத்தில் கைகளில் கும்பத்தை ஏந்தி அல்லு அர்ஜுன் வருவது போன்ற புகைப்படங்கள் நமக்கு கிடைத்தன.

ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் 2017ம் ஆண்டிலிருந்து கையில் கும்பம் ஏந்தி வரும் புகைப்படம் பகிரப்பட்டு வருவதைக் காண முடிந்தது. இந்த புகைப்படத்தை எடிட் செய்து, கும்பத்தை நீக்கிவிட்டு அதற்கு பதில் ராமர் சிலையை வைத்துள்ளனர்.

தொடர்ந்து தேடிய போது அந்த படத்தின் டீசர் நமக்கு கிடைத்தது. அதில் கையில் கும்பத்துடன் அவர் நடந்த வரும் காட்சி தெளிவாகத் தெரிகிறது. இதன் மூலம் துவ்வாடா ஜகன்னாதம் என்ற அல்லு அர்ஜுன் நடித்த தெலுங்கு படத்தின் புகைப்படத்தை எடிட் செய்து ராமர் சிலையை வைத்த பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

அயோத்தி குழந்தை ராமர் சிலையுடன் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் இருக்கும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:‘ராமர் சிலையை ஏந்தி நிற்கும் அல்லு அர்ஜுன்’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Written By: Chendur Pandian

Result: Altered