பாஜக நிர்வாகிகள் மது அருந்துவதாகப் பரவும் படம் உண்மையா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

தமிழ்நாடு பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்ட தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் ஒன்றாக மது அருந்துவது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Twitter Claim Link l Archived Link  

தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அவர்களின் மேஜை மீது மது பாட்டில்கள் உள்ளது போன்று எடிட் செய்யப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “குடிகாரர்களின் மீட்டிங் 😒😒😒 பெரிய யோக்கியனுங்க மாதிரியே பேசுவானுங்க இந்த குடிகாரபயலுக 💦💦💦💦 டேய் ஆடு என்ன இதெல்லாம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை Prabhu Chandran (பாச.பிரபு) @PasaPrabhu என்ற ட்விட்டர் ஐடி கொண்டவர் 2023 பிப்ரவரி 28ம் தேதி பதிவிட்டுள்ளார்.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ஃபேஸ்புக்கில் கருத்து கண்ணாயிரம் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் வெளியிட்டிருந்த பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து Selvaraj என்ற ஐடி கொண்டவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இவர்களைப் போல பலரும் இந்த படத்தை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாடு பாஜக அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் மது அருந்துவது போன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. ஆனால் படத்தில் மது பாட்டில்கள் எல்லாம் போட்டோ எடிட் முறையில் சேர்க்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, உண்மைப் படத்தைத் தேடி ஆய்வு மேற்கொண்டோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, தமிழ்நாடு பாஜக நிர்வாகி ஒருவர் இந்த படத்துடன் பதிவிட்டிருப்பது தெரிந்தது.

Archive

இந்த உண்மையான படத்தை வெளியிட்டிருப்பது தமிழ்நாடு பாஜக தொழில் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் செல்வகுமார் என்பது தெரிந்தது. அதில், “இன்று கவுண்டம்பாளையம் சட்டமன்ற ஆய்வு கூட்டத்திற்கு வந்த மாநில அமைப்பு பொதுசெயலாளர் கேசவ விநாயகன் அவர்களும், மாவட்ட தலைவர்  @balaji_utham, மற்ற மாவட்ட மண்டல நிர்வாகிகள் எங்கள் வீட்டில் மதிய உணவு எடுத்து கொண்ட பொழுது” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகைப்படத்தை தமிழ்நாடு பாஜக-வின் ஊடகப் பிரிவு நிர்வாகி ஒருவருக்கு அனுப்பியிருந்தோம். அவரும் இது உண்மையில்லை, எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்று உறுதி செய்தார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது, விஷமத்தனமானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் மது அருந்தியதாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பாஜக நிர்வாகிகள் மது அருந்துவதாகப் பரவும் படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: Altered

Leave a Reply