பொங்கல் கொண்டாடுபவர்கள் இந்துக்களே அல்ல என அண்ணாமலை கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

பொங்கல் கொண்டாடுபவர்கள் இந்துக்களே அல்ல என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

ஊடகம் ஒன்றின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அந்த நியூஸ் கார்டில், “பொங்கல் கொண்டாடுபவர்கள் இந்துக்களே அல்ல. அதே தினத்தில் இந்துக்களின் விழாவான மகர சங்கராந்தியைக் கொண்டாடுபவர்கள்தான் உண்மையான இந்துக்கள் – தமிழக பாஜக தலைவர் கு. அண்ணாமலை” என்று இருந்தது.

இந்த பதிவை காங்கிரஸ்காரன் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜனவரி 4ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த பதிவை தங்கள் ஃபேஸ்புக் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை உலகம் முழுக்க உள்ள தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சாதி, மத பாகுபாடு இன்றி தமிழர்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுபவர்கள் இந்துக்கள் இல்லை என்று அண்ணாமலை கூறியதாக நியூஸ் கார்டை சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதுவும் வைரல் ஆகத் தொடங்கியுள்ளது. எனவே, இந்த நியூஸ் கார்டு பற்றி ஆய்வு செய்தோம்.

ஐபிசி தமிழ் என்ற ஊடகத்தின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளதால், அந்த ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தை பார்வையிட்டோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலவே அண்ணாமலை புகைப்படத்துடன் ஜனவரி 3, 2022 அன்று அந்த ஊடகம் வெளியிட்ட நியூஸ் கார்டு நமக்குக் கிடைத்தது. ஆனால் அதில், “எத்தனை கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க முடியாது! – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து வெளியிட்டிருப்பது தெரியவந்தது.

பொங்கல் கொண்டாடுபவர்கள் இந்துக்கள் இல்லை என்று அண்ணாமலை கூற வாய்ப்பு இல்லை. இருப்பினும் நம்முடைய ஆய்வுக்காக அண்ணாமலை அப்படிக் கூறினாரா, அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. அவருடைய சமூக ஊடக பக்கங்களிலும் இது தொடர்பாக எந்த ஒரு தகவலும் இல்லை. எனவே, இந்த நியூஸ் கார்டை தமிழ்நாடு பா.ஜ.க ஊடக பொறுப்பாளர் ஒருவருக்கு அனுப்பி, விசாரித்தோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுபவர்கள் இந்துக்கள் இல்லை என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பொங்கல் கொண்டாடுபவர்கள் இந்துக்கள் அல்ல என்று அண்ணாமலை கூறியதாக பரவும் செய்தி தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பொங்கல் கொண்டாடுபவர்கள் இந்துக்களே அல்ல என அண்ணாமலை கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False