
தமிழ்நாடு பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் தவறே செய்தாலும் அவரைத் தண்டிக்கும் தகுதி தனக்கில்லை என்று அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் புகைப்படங்களுடன் ஏபிபி நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கமலாலயம் என்கிற ஹஸ்தினாபுரத்தின் பீஷ்ம பிதாமகர் கேசவ பெருமாள்ஜி. அவர் தவறு செய்திருக்க வாய்ப்பே இல்லை. அவர் தவறே செய்திருந்தாலும் அவரைத் தண்டிக்கும் தகுதி எனக்கில்லை – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நியூஸ் கார்டை நிலவு மாணிக்கம் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 நவம்பர் 26ம் தேதி பதிவிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை தங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.

உண்மை அறிவோம்:
தமிழ்நாடு பாஜக அமைப்புச் செயலாளராக இருப்பவர் கேசவ விநாயகம். சமீபத்தில் பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர் அணி மற்றும் சிறுபான்மையினர் அணி பொறுப்பாளர்களுக்கு இடையே நடந்த தொலைப்பேசி உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த உரையாடலில் கேசவ விநாயகம் பெயரும் இடம் பெற்றது என்று கூறப்படுகிறது. அதை வைத்து சமூக ஊடகங்களில் நிறைய போலியான நியூஸ் கார்டுகள் வெளியாகின.
இந்த சூழலில் கேசவ விநாயகம் தவறே செய்தாலும் தண்டிக்க முடியாது என்ற வகையில் அண்ணாமலை கூறியதாக நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. கேசவ விநாயகம் பெயரைத் தவறான கேசவ பெருமாள் என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், வழக்கமாக ஏபிபி நாடு வெளியிடும் நியூஸ் கார்டு போல இது இல்லை. எனவே, இது போலியானது என்பது தெளிவாகத் தெரிந்தது. இதை உறுதி செய்துகொள்ள ஆய்வைத் தொடர்ந்தோம்.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில், அது நவம்பர் 23, 2022 அன்று வெளியானது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த குறிப்பிட்ட நாளில் வெளியான நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். அண்ணாமலை – கேசவ விநாயகம் புகைப்படத்துடன் எந்த ஒரு நியூஸ் கார்டும் வெளியாகவில்லை. இதை உறுதி செய்துகொள்ள, ஏ.பி.பி நாடு ஊடகத்தின் பொறுப்பாளருக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பி இது உண்மையா, போலியா என்று கேட்டோம். அவரும் இது போலியான நியூஸ் கார்டு என்று உறுதி செய்தார்.
அண்ணாமலை இப்படி ஏதும் கருத்து தெரிவித்திருந்தாரா என்று அறிய தமிழ்நாடு பாஜக செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இந்த தகவல் தவறானது. இது போலியான நியூஸ் கார்டு என்று உறுதி செய்தார்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் தமிழ்நாடு பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் தவறே செய்தாலும் அவரை தண்டிக்கும் தகுதி தனக்கில்லை என்று அண்ணாமலை கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தமிழ்நாடு பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் தவறே செய்தாலும் அவரை தன்னால் தண்டிக்க முடியாது என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:பாஜக நிர்வாகி கேசவ விநாயகம் தவறே செய்தாலும் தண்டிக்க முடியாது என்று அண்ணாமலை கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
