
கால்பந்தாட்ட ஜாம்பவான் மாரடோனாவின் இறுதி ஊர்வலம் என்று கூறி ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது உண்மையா என ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
சாலையின் இரு புறமும் ஆயிரக் கணக்கான மக்கள் திரண்டிருக்கும் இறுதி ஊர்வலம் ஒன்றின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அர்ஜெண்டினா கால்பந்து வீரர் மரடோனாவின் இறுதிப்பயணம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Subramanian Santhanam என்பவர் 2020 நவம்பர் 27 அன்று பகிர்ந்துள்ளார்.

Subramanian Santhanam மட்டுமின்றி பலரும் இது மரடோனாவின் இறுதி ஊர்வலத்தின் போது எடுக்கப்பட்ட படம் என்று சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அர்ஜென்டினாவைச் சார்ந்தவரும் கால்பந்தாட்ட உலகின் ஜாம்பவானுமான டீகோ மரடோனா மாரடைப்பு காரணமாக 2020 நவம்பர் 25 அன்று உயிரிழந்தார். அவரது இறுதி ஊர்வலம் அர்ஜென்டினாவின் தலைநகரான புவெனஸ் ஐரிஸில் நவம்பர் 27ம் தேதி நடந்தது. இதில் லட்சக் கணக்கானவர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள், புகைப்படங்களை முன்னணி செய்தி நிறுவனங்கள், ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.
இந்த நிலையில் மரடோனாவின் இறுதி ஊர்வல படம் என்று ஒரு படம் வைரல் ஆகி வருகிறது. தற்போது எடுக்கப்பட்ட படம் போல இல்லை. கறுப்பு நிற காரில் மரடானா உடல் எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால், இந்த படத்தில் சிவப்பு நிற வேனில் உடல் கொண்டு செல்லப்படுகிறது. மரடோனா உடல் ஏற்றப்பட்ட வாகனத்துக்கும் இந்த புகைப்படத்தில் உள்ள வாகனங்களுக்கும் தொடர்பே இல்லை.

மேலும், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட படத்தில் பலரும் கொடி ஒன்றை வைத்திருப்பதை காண முடிந்தது. அதை பெரிதுபடுத்தி பார்த்த போது பிரேசில் நாட்டு கொடி என்பது தெரிந்தது.
அர்ஜென்டினாவைச் சேர்ந்த மரடோனாவின் இறுதி ஊர்வலத்தில் எதற்காக பிரேசில் கொடியை மக்கள் பிடிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. எனவே, இந்த புகைப்படம் எங்கே எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம்.

படம்: பிரேசில் நாட்டின் தேசிய கொடி.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். பிரேசிலின் ஃபார்முலா ஒன் வீரர் அயர்டன் சென்னாவின் இறுதி ஊர்வலம் என்று பல தகவல்கள் நமக்குக் கிடைத்தன. இதே படத்தை அயர்டன் சென்னாவின் இறுதி ஊர்வல காட்சி என்று பல செய்தி ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. இந்த படம் 26 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1994 மே 1ம் தேதி பிரேசிலில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
26 ஆண்டுகள் கடந்த பிறகும் பிரேசில் மக்கள் அவர் மீது மிகுந்த நேசம் வைத்துள்ளனர் என செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், உலகில் அதிக அளவில் மக்கள் கூடிய இறுதி ஊர்வலங்கள் பட்டியலில் இவருடைய ஊர்வலமும் ஒன்று எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அசல் பதிவைக் காண: dailymail.co.uk I Archive 1 I ayrtonsennadasilvaforever I Archive 2
இதன் அடிப்படையில் வீடியோ ஏதும் கிடைக்கிறதா என்று தேடினோம். அயர்டன் சென்னாவின் இறுதி ஊர்வலத்தின் முழு வீடியோவுமே கிடைத்தது. அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட படத்தில் இருப்பது போலவே சிவப்பு நிற வேன் ஒன்றில் அவருடைய உடல் எடுத்துச் செல்லப்பட்டிருந்தது.

அசல் பதிவைக் காண: YouTube
இதன் மூலம் அயர்டன் சென்னாவின் இறுதி ஊர்வல படத்தை எடுத்து கால்பந்தாட்ட ஜாம்பவான் டீகோ மரடோனாவின் இறுதி ஊர்வல படம் என்று தவறான தகவல் சேர்த்து பகிரப்பட்டு வருவது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் இந்த புகைப்படம் 26 ஆண்டுகளுக்கு முன்பு ஃபார்முலா 1 விபத்தில் உயிரிழந்த பிரேசில் வீரர் அயர்டன் சென்னாவின் இறுதி ஊர்வல புகைப்படம் என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:மரடோனாவின் இறுதி ஊர்வலம் என்று கூறி பரவும் 26 ஆண்டுகள் பழைய புகைப்படம்!
Fact Check By: Chendur PandianResult: False

Thank you FB