அயோத்தியில் விளக்கில் இருந்து எண்ணெய் சேகரித்த சிறுமி புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

அயோத்தியில் சமீபத்தில் அகல் விளக்கேற்றி கின்னஸ் சாதனை படைக்கப்பட்ட நிகழ்வின் போது விளக்கிலிருந்து சமையலுக்கு எண்ணெய்யைச் சேகரித்த சிறுமி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

அகல் விளக்கிலிருந்து எண்ணெய்யைச் சேகரிக்கும் சிறுமி ஒருவரின் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “யோகி ஆதித்யாநாத் அயோத்தியில் கின்னஸ் உலகசாதனைக்காக விளக்கேற்றும் நிகழ்வு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். நாடகம் முடிந்த பிறகு அணைந்த விளக்குகளிலிருந்து ஒரு குழந்தை சமையலுக்காக எண்ணெயை சேகரிக்கிறது. ஒரு யுகத்தின் வறுமையை தேக்கிவைத்திருக்கும் இந்தக் கண்களை சந்திக்கமுடியவில்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவானது 2023 நவம்பர் 12ம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்தது.

உண்மை அறிவோம்:

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் சமீபத்தில் 22.23 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது  பொது மக்கள் விளக்குகளிலிருந்து எண்ணெய் எடுத்துச் சென்றதாக செய்திகள் சமூக ஊடகங்களில் பரவியது. இதுதொடர்பாக சில படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு, உத்தரப் பிரதேச அரசை பலரும் விமர்சித்து வருகின்றனர். 

ஏழை சிறுமி ஒருவர் விளக்குகளிலிருந்து எண்ணெய் சேகரிக்கும் புகைப்படத்தைப் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த புகைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்பதால் இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

Archive

இந்த புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடல் தளத்தில் பதிவேற்றி தேடினோம். அப்போது, 2019ம் ஆண்டில் இருந்து இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. 2019ம் ஆண்டு அயோத்தியில் 5 லட்சம் விளக்குகள் ஏற்றும் நிகழ்வு நடந்தது. அப்போது அகல் விளக்குகளிலிருந்து மீதமான எண்ணெய்யைச் சிறுமி  ஒருவர் சேகரித்தார் என்று குறிப்பிட்டு இந்த படத்தை சிலர் தங்கள் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டிருந்தனர். ஃபேஸ்புக் உள்ளிட்ட பல சமூக ஊடகங்களில் இந்த புகைப்படம் 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் பதிவிடப்பட்டிருப்பதைக் காண முடிந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook  

உத்தரப்பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற பிறகு அயோத்தியில் தீபாவளியையொட்டி விளக்குகள் ஏற்றும் விழா மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. 1917ம் ஆண்டு 51 ஆயிரம் விளக்குகள் ஏற்றப்பட்டது. அது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது 2023ம் ஆண்டில் 22.23 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளன. 

இப்படி ஒவ்வொரு ஆண்டும் இப்படி விழா நடந்து முடிந்ததும் சமீபத்திய புகைப்படங்களுடன் பழைய படங்கள், வீடியோக்களையும் நெட்டிசன்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதைக் காண முடிகிறது. இந்த ஆண்டும் கூட எண்ணெய்யை சேகரித்து சென்ற சிறுவர்கள், பொது மக்கள் படங்கள் செய்தி, சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ளது. உ.பி எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூட இந்த புகைப்படங்களை ஷேர் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் 2023ல் எடுக்கப்பட்டது இல்லை, அதே நேரத்தில் 2019ம் ஆண்டு நடந்த தீபங்கள் ஏற்றும் விழாவின் போது எடுக்கப்பட்டது என்பது தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 2019ல் எடுக்கப்பட்ட படத்தை இப்போது நடந்த நிகழ்வின் போது எடுக்கப்பட்டதாகத் தவறாகப் பகிர்ந்திருப்பது இதன் மூலம் உறுதியாகிறது.

முடிவு:

அயோத்தியில் 2019ம் ஆண்டு நடந்த தீபாவளி விளக்கேற்று நிகழ்வின் புகைப்படத்தை 2023ல் எடுக்கப்பட்டதாக தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில்  ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அயோத்தியில் விளக்கில் இருந்து எண்ணெய் சேகரித்த சிறுமி புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது?

Written By: Chendur Pandian 

Result: Missing Context