வந்தே பாரத் ரயில் சக்கரம் தட்டையாக மாறியது என்று பரவும் வதந்தி!

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

வந்தே பாரத் ரயில் சக்கரம் சரியான முறையில் தயாரிக்காத காரணத்தால் பாரம் தாங்காமல் தட்டையானது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ரயில் சக்கரம் தட்டையாக இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டயர் பஞ்சர் ஆகும்போது லோடு தாங்காம கார் அல்லது லாரி மாதிரி வாகனங்களின் ரிம் சப்பையாகும். எத்தனையோ விதமான ரயில் விபத்துகளைப் பாத்திருப்போம். எதிலும் ரயில் வண்டியின் இரும்புச் சக்கரம் இப்படி தட்டையாகறதை பாத்திருக்கவே முடியாது. இதான் வந்தே பாரத். எது எக்கேடு கெட்டுப்போனா என்ன..” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை புது அனுபவம் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 அக்டோபர் 10ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் பற்றிய பெருமிதம் தரும் பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்தன.  இந்த நிலையில் மாட்டின் மீது மோதியதில் வந்தே பாரத் ரயில் இன்ஜின் முன்பகுதி சேதம் அடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு முறை கால்நடை மீது மோதியது, வண்டி பழுதடைந்து நின்றது என்று தொடர்ந்து வந்தே பாரத் தொடர்பான எதிர்மறை செய்திகள் வந்துகொண்டே இருந்தன. இதனால் வந்தே பாரத் ரயிலின் பாதுகாப்பு பற்றி பலரும் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் வந்தே பாரத் ரயிலின் சக்கரம் உருகி, தட்டையாகி நிற்கும் காட்சி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

இந்த புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். ஆனால், வந்தே பாரத் ரயில் சக்கரம் தட்டையானது என்று எந்த செய்தியும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் இந்த புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது என்ற தகவலும் கிடைக்கவில்லை. பலரும் கேலி கிண்டல் செய்யும் வகையில் இந்த புகைப்படத்தை பல ஆண்டுகளாக பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது.

தொடர்ந்து தேடிய போது, rmf-magazine.com என்ற ரயில் தொடர்பான இதழில் இந்த புகைப்படம் 2013ம் ஆண்டு வெளியாகி இருப்பது தெரிந்தது. அதிலும் கூட இது எங்கே எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை. இதற்கிடையே ட்வீட் பதிவு ஒன்று நமக்கு கிடைத்தது.

உண்மைப் பதிவைக் காண: rmf-magazine.com I Archive

2016ம் ஆண்டு நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் அந்த ட்வீட் வெளியிடப்பட்டிருந்தது. அதற்கு பதில் அளித்த ரயில் ஓட்டுநர் ஒருவர், இந்த சம்பவம் பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில் நடந்தது என்று குறிப்பிட்டிருந்தார். இதைத் தவிர்த்து உறுதி செய்யும் வகையில் எந்த ஒரு தகவலும் நமக்கு கிடைக்கவில்லை.

Archive

அதே நேரத்தில் வந்தே பாரத் ரயில் எப்போது அறிமுகம் செய்யப்பட்டது என்று பார்த்தோம். 2019ம் ஆண்டு தான் வந்தே பாரத் ரயிலைப் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்திருந்தார். அதன் பிறகு தற்போது பல வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருவது தெரிந்தது. ரயில்கள் தொடர்பான இணையதளத்தில் 2013ம் ஆண்டிலேயே இந்த புகைப்படம் வெளியிட்டிருப்பதன் மூலமும், முதல் வந்தே ரயில் 2019ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது என்பதன் மூலமும், இந்த ரயில் புகைப்படம் வந்தே பாரத் ரயிலுக்கு உரியது இல்லை என்ற முடிவுக்கு வர முடிந்தது.

வந்தே பாரத் பல சோதனைகள் எதிர்கொண்டு வரும் சூழலில், பழைய படத்தை எடுத்து, வந்தே பாரத் ரயிலின் தட்டையான சக்கரம் என்று தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முந்தைய படத்தை, வந்தே பாரத் ரயிலின் சக்கரம் என்று தவறாக பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:வந்தே பாரத் ரயில் சக்கரம் தட்டையாக மாறியது என்று பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False