சாதாரண ஒரு நீரூற்றைச் சிவலிங்கம் என்று வாதாடுகின்றனர் என்று ஒரு படத்தைச் சிலர் பகிர்ந்து வருகின்றனர். வாரணாசி ஞானவாபி மசூதி நீரூற்று போன்று போன்று பகிரப்படும் இந்த படம் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இஸ்லாமியர்கள் தொழுகைக்குத் தயாராக தங்களை சுத்தம் செய்துகொள்ளும் படம் பகிரப்பட்டுள்ளது. நீரூற்று மட்டும் சிவப்பு நிறத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. அதனுடன், "சாதாரண ஒரு நீரூற்று .. இதை சிவலிங்கம் என்று கூறி வாதிடுவார்களேயானால் - நெஞ்சில் பதிந்துள்ள நஞ்சின் தன்மை குறித்து நாம் கவலைப் படுவதை தவிர - வேறு என்ன செய்ய முடியும்.." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Kundrathu Murugaraj என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் இந்த பதிவை 2022 மே 16ம் தேதி பதிவிட்டுள்ளார். இவர் பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகைக்கு முன்பு தங்களை சுத்தம் செய்துகொள்ளும் குளத்தில் உள்ள நீரூற்றில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி வெளியானது. இந்த நிலையில், இதுதான் மறைக்கப்பட்ட சிவலிங்கம் என்று முதலில் வதந்தி பரவியது. அது ஞானவாபி கோவில் இல்லை, ஒடிஷாவில் உள்ள சிவன் கோவில் என்று ஆதாரத்துடன் உறுதி செய்திருந்தோம்.

இந்த நிலையில் நீரூற்று ஒன்றின் படத்தைப் பகிர்ந்து, இதைத்தான் சிவலிங்கம் என்று குறிப்பிடுகிறார்கள் என்ற வகையில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது ஞானவாபி மசூதியில் எடுக்கப்பட்டது என்று நேரடியாக குறிப்பிடவில்லை. ஆனால், சிவப்பு நிறத்தில் வட்டமிட்டு, சாதாரண நீரூற்றை சிவலிங்கம் என்று கூறுவார்களேயானால் என குறிப்பிட்டிருப்பதன் மூலம், தற்போது பிரச்னைக்குரிய பகுதி இதுதான் என்பது போன்ற தோற்றத்தை இந்த பதிவு ஏற்படுத்துகிறது. எனவே, இந்த புகைப்படம் ஞானவாபி மசூதியைச் சார்ந்ததா என்று மட்டும் ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: alamy.com I Archive 1 I gettyimages.in I Archive 2

படத்தில் Alamy என வாட்டர்மார்க் லோகோ இருந்தது. Alamy என்பது புகைப்படங்களை விற்பனை செய்யும் இணையதளம் ஆகும். எனவே, இந்த புகைப்படத்தின் நம்பகத்தன்மையைக் கண்டறிவது அவ்வளவு கடினமான காரியமாக இல்லை. புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த புகைப்படம் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள ஷெரீப் தர்காவில் 2016ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர். இதே படத்தை Getty Images தளமும் விற்பனைக்கு வைத்திருந்ததைக் காண முடிந்தது. இதன் மூலம் ஞானவாபி மசூதியில் உள்ள நீரூற்று என்பது போன்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

வாரணாசி ஞானவாபி மசூதியில் உள்ள நீரூற்று, இதைத்தான் சிவலிங்கம் என்று கூறுகிறார்கள் என்று பகிரப்படும் பதிவு தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஞானவாபி மசூதியில் உள்ள சர்ச்சைக்குரிய நீரூற்றின் புகைப்படமா இது?

Fact Check By: Chendur Pandian

Result: Missing Context