
செல்போன், ஸ்மார்ட் போன்களை பல ஆண்டுகளுக்கு முன்பே கோயிலில் செதுக்கிய தமிழன் என்று குறிப்பிட்டு பலரும் சமூக ஊடகங்களில் தகவல் பகிர்ந்து வருகின்றனர்.
தகவலின் விவரம்:

நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்கு வாசகர் ஒருவர் புகைப்படம் ஒன்றை அனுப்பி அது பற்றி உண்மையா என்று கேட்டிருந்தார். இரண்டு பெண் சிலைகளின் புகைப்படத்துக்கு கீழே “பின்னால் வர போகும் செல்போன், ஸ்மார்ட் போன்களை பல ஆண்டுகளுக்கு முன்பே செதுக்கினானே எம் தமிழன்!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
சமூக ஊடகங்களில் இந்த பதிவை பகிர்ந்து வருகிறார்களா என்று தேடினோம். பலரும் இந்த பதிவை பகிர்ந்து வருகின்றனர். Velu Solaimuthu என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜூலை 22ம் தேதி இந்த படத்தை பகிர்ந்திருந்தார்.

உண்மை அறிவோம்:
பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கம்ப்யூட்டரின் சிற்பத்தைத் தத்ரூபமாக வடித்திருந்தார்கள் என்று ஒரு வதந்தி பரவியது. அது தவறான தகவல் என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோவில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். தற்போது, செல்போன் பயன்படுத்துவது போன்ற சிலையை செதுக்கியுள்ளார்கள் என்று பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இது குஜராத் மாநிலத்தில் உள்ள பாலிதானா கோவில் என்று தெரியவந்தது. குஜராத் மாநிலம் பவநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள சமணக் கோவில் இதுவாகும். அந்த கோவிலில் இந்த சிற்பம் இருப்பதாக shunya.net என்ற இணையதளத்தில் புகைப்படம் வெளியாகி இருந்தது. இந்த இணையதளம் வெளியிட்ட புகைப்படத்தை எடுத்து பகிர்ந்திருப்பது தெரிந்தது.

உண்மைப் பதிவைக் காண: shunya.net I Archive
செல்போன் பயன்பாடு தொடர்பாக சிலை வடிக்கப்பட்டதா என்று பார்த்தோம். ஒரு பெண் கண்ணுக்கு மையிட்டு தன்னை அழகுபடுத்திக்கொள்கிறார் என்றும் மற்றொரு பெண் கடிதம் எழுதுகிறார் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
செல்போன் பேசுவது போல இருக்கும் சிலையின் வேறு புகைப்படங்கள் கிடைக்கிறதா என்று பார்த்தோம். அப்போது agefotostock.com உள்ளிட்ட சில புகைப்படங்களை விற்பனை செய்யும் தளத்தில் இந்த படங்கள் கிடைத்தன. அதில் பார்க்கும் போது கண்ணுக்கு மை வைப்பது தெளிவாகத் தெரிகிறது.

உண்மைப் பதிவைக் காண: agefotostock.com I Archive
நம்முடைய ஆய்வில், இந்த சிற்பங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தது இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சிற்பங்கள் குஜராத் மாநிலத்தில் உள்ளது. செல்போன் பயன்படுத்தும் பெண்கள் என சிற்பம் வடிக்கப்படவில்லை. பெண்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்ளும் காட்சி என்றும் கடிதம் எழுதும் காட்சி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே செல்போன் பயன்பாடு தொடர்பாக தமிழர்கள் சிற்பம் வடித்தனர் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
செல்போன் பயன்பாடு பற்றி பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் சிலை செதுக்கினார்கள் என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:பல நூற்றாண்டுகளுக்கு முன்பே செல்போனை செதுக்கிய தமிழன் என்று பகிரப்படும் வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: False
