
மகாராஷ்டிர முதல்வர் தொடக்கக் காலத்தில் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்த போது எடுத்த படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
அலங்கரிக்கப்பட்ட ஆட்டோவுடன் ஒருவர் நிற்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதனுடன் ஆங்கிலத்தில், “மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டெ 1997ம் ஆண்டு ஆட்டோ டிரைவாக இருந்த போது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நிலைத் தகவலில், “1997ல் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்த ஏக்நாத் ஷிண்டே இன்று மகாராட்டிர முதலமைச்சர். பாஜகவினால் மட்டுமே இது சாத்தியம். நீங்கள் கூட்டணி கட்சியாக இருந்தாலும் கூட!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை ராஜேஷ்குமார் பாஜக என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 ஜூலை 27ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா அரசை கவிழ்த்துவிட்டு முதலமைச்சராக ஆனவர் ஏக்நாத் ஷிண்டே. சிவ சேனா கட்சியை உடைத்து பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து முதல்வராக பொறுப்பேற்றார். ஆட்டோ டிரைவராக வாழ்க்கையைத் தொடங்கிய ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக ஆனார் என்று ஊடகங்களில் செய்தி வெளியாகின. இந்த நிலையில், ஆட்டோ ஓட்டிய ஏக்நாத் ஷிண்டேவின் இளமைக்கால புகைப்படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த புகைப்படத்தில் இருப்பது ஏக்நாத் ஷிண்டே இல்லை, மகாராஷ்டிரா ரிக்ஷா பஞ்சாயத்து என்ற அமைப்பின் நிறுவனத் தலைவர் பாபா காம்ப்ளே என்று சில செய்திகள் கிடைத்தன.
இந்த புகைப்படத்தில் இருக்கும் பாபா கம்ப்ளேவை தொடர்புகொண்டு கேட்டதாகவும், 1997ம் ஆண்டு இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்றும், புகைப்படத்தில் இருப்பது தாம்தான் என்றும், இதற்கும் ஏக்நாத் ஷிண்டேவுக்கும் தொடர்பில்லை என்றும் பாபா காம்ப்ளே கூறியதாக செய்திகள் கிடைத்தன.
மும்பை டாக் என்ற ஊடகத்திற்குப் பாபா கம்ப்ளே அளித்த வீடியோ பேட்டி நமக்கு கிடைத்தது. ஆட்டோவை பாபா காப்ளே ஓட்ட நிருபர் பேட்டி எடுக்கிறார். ஆட்டோ ஓட்டுநர் புகைப்படம் ஒன்று ஏக்நாத் ஷிண்டே என்று கூறி வைரல் ஆகிறது. ஆனால், அது அவர் இல்லை என்று கூறுகின்றனர். அதைத் தொடர்ந்து பாபா காம்ப்ளே பேசுகிறார். 1997ம் ஆண்டு இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. புகைப்படத்தில் இருப்பது தான்தான் என்று பாபா காம்ப்ளே கூறுகிறார். நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ ஆங்கிலத்தில் கூட இது தொடர்பாக கட்டுரை வெளியாகி இருந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook
பாபா காம்ப்ளே ஃபேஸ்புக் ஐடி கிடைத்தது. அதில் வேறு ஒருவர் வெளியிட்டிருந்த பதிவை பாபா காம்ப்ளே பகிர்ந்திருந்தார். அதில், “இந்த புகைப்படத்தை மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே என்று குறிப்பிட்டு பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த புகைப்படம் பிம்பிரி சின்ச்வாட் நகரில் உள்ள ரிக்ஷா அமைப்பின் தலைவர் பாபா காம்ப்ளேக்கு சொந்தமானது. உண்மை அறியாமல் யாரும் பகிரவோ, கருத்தைக் கூறவோ வேண்டாம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் மூலம் ஆட்டோ டிரைவராக ஏக்நாத் ஷிண்டே இருந்த போது எடுக்கப்பட்ட படம் என்று பகிரப்படும் படம் தவறானது என்று உறுதியானது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் இளமைக்காலம் என்று பகிரப்படும் புகைப்படம் அவருடையது இல்லை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் இளமைக்காலம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
