
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் ஒருவர் வாக்காளர்களுக்கு மது மற்றும் கோழியை வழங்கினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
சில மாதங்களுக்கு முன்பு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் ஒருவர் பொது மக்களுக்குக் கோழி மற்றும் மது பாட்டில் வழங்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. ஆனால், நிலைத் தகவலில், “கர்நாடகா தேர்தல் களத்தில், பாஜக வேட்பாளரின் வாக்கு கேட்கும் லட்சணத்தைப் பாருங்கள். இவர்கள் தான் ஊழல் ஒழிக்க பிறந்தவர்களாம். எங்கே அந்த அன்ணாமலையை காணவில்லை……?” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவை EswaranSu (@SuEswaran) என்ற ட்விட்டர் ஐடி கொண்டவர் 2023 ஏப்ரல் 25ம் தேதி பதிவிட்டுள்ளார்.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஃபேஸ்புக்கில் இந்த பதிவை யாரும் பகிர்ந்துள்ளார்களா என்று தேடிப் பார்த்தோம். அப்போது, Ravi Muniaswami என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஏப்ரல் 25ம் தேதி வெளியிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சில மாதங்களுக்கு முன்பு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி நிர்வாகி ஒருவர் கட்சித் தொண்டர்களுக்கு கோழி மற்றும் மது பாட்டில் வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவை கர்நாடக சட்டமன்ற தேர்தலுடன் தொடர்புப்படுத்திப் பகிர்ந்துள்ளனர்.
வீடியோவில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் கே.டி.ராமாராவின் கட்-அவுட் உள்ளது. மதுவை விநியோகிக்கும் தலைவர் கழுத்தில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் துண்டை அணிந்துள்ளார். ஆனால், இது தெரிந்தோ, தெரியாமலோ கர்நாடகாவில் வாக்காளர்களுக்கு பாஜக வேட்பாளர் மது விநியோகம் செய்தார் என்று தவறாக பகிர்ந்து வருகின்றனர். இது தவறான தகவல் என்பதை உறுதி செய்ய, இது தொடர்பாக வெளியான செய்தியைத் தேடினோம்.
கூகுள் தேடலில், டிஆர்எஸ் தலைவர் மது விநியோகம் என்று சில கீவார்த்தைகளை டைப் செய்து தேடினோம். அப்போது, 2022 அக்டோபர் 4ம் தேதி இந்த வீடியோவை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டிருப்பது தெரிந்தது. அதை அடிப்படையாக வைத்துப் பல ஊடகங்களும் இந்த வீடியோ மற்றும் செய்தியை வெளியிட்டிருந்தன. அந்த செய்தியில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், டிஆர்எஸ் கட்சியைப் பாரதிய ராஷ்டிரிய சமிதி என்று மாற்றி புதிய கட்சி தொடங்க உள்ள நிலையில் வாரங்கல்லில் அக்கட்சி நிர்வாகி ஒருவர் பொது மக்களுக்கு மது மற்றும் கோழியை இலவசமாக வழங்கினார் என்று குறிப்பிட்டிருந்தனர்.

உண்மைப் பதிவைக் காண: hindustantimes.com I Archive
இதன் மூலம், தெலங்கானாவில் 2022 அக்டோபரில் எடுக்கப்பட்ட வீடியோவை தவறாக, கர்நாடகாவில் பாஜக வேட்பாளர் மது வழங்கினார் என்று சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
2022 அக்டோபரில் தெலங்கானா டிஆர்எஸ் கட்சி நிர்வாகி ஒருவர் கோழியும், மதுவும் வழங்கிய வீடியோவை கர்நாடக பாஜக வேட்பாளர் மது வழங்கினார் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:கர்நாடக தேர்தலில் வாக்காளர்களுக்கு மது வழங்கிய பா.ஜ.க வேட்பாளர் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
