மக்களுக்கு நன்றியே இல்லை என்று அமைச்சர் சக்கரபாணி கூறினாரா?
பொங்கல் பரிசை முதல்வரே பார்த்து பார்த்து உருவாக்கினார் ஆனால் மக்களுக்கு நன்றி இல்லை என்று உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று அமைச்சர் சக்கரபாணி புகைப்படத்துடன் கூடிய ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "மக்களுக்கு நன்றியே இல்லை. பொங்கல் பரிசை முதல்வரே பார்த்து பார்த்து உருவாக்கினார் ஆனால் மக்களுக்கு நன்றி இல்லை" என்று இருந்தது.
இந்த பதிவை அக்ஷிதா முருகன் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜனவரி 19ம் தேதி பகிர்ந்துள்ளார். இவரைப் போல பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது தொடர்பாக அ.தி.மு.க, பா.ஜ.க-வினர் தொடர்ந்து புகார்களை எழுப்பி வருகின்றனர். இந்த சூழலில், பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிய மக்களுக்கு நன்றியில்லை என்று தமிழ்நாடு அரசின் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாக ஒரு நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நியூஸ் கார்டு தமிழ் ஃபாண்ட் வழக்கமாக நியூஸ் 7 தமிழ் பயன்படுத்தும் ஃபாண்ட் இல்லை. அமைச்சரின் பெயரைக் கூட பயன்படுத்தாமல் நியூஸ் கார்டை ஊடகம் வெளியிட்டிருக்க வாய்ப்பில்லை. இருப்பினும், அமைச்சரையும் தமிழ்நாடு முதலமைச்சரையும் பலரும் விமர்சித்து பதிவிட்டு வரவே இது பற்றி ஆய்வு செய்தோம்.
முதலில் இது தொடர்பாக நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டுகளை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பார்வையிட்டோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த ஒரு நியூஸ் கார்டும் அதில் இல்லை. இதே போன்று டிசைன் கொண்ட நியூஸ்கார்டை நியூஸ் 7 வெளியிட்டுள்ளதா என்று சற்று பின்னோக்கி சென்று பார்த்தோம்.
2022 ஜனவரி 11ம் தேதி நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற நியூஸ் கார்டு வெளியாகி இருப்பது தெரிந்தது. அதில், "பொங்கல் பரிசு புகார் - விளக்கம். பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து புகார் கூறுபவர்கள் அதிமுகவை சேர்ந்தவர்கள்; அதிமுக கொடுத்ததை விட, திமுக ஆட்சியில் பொங்கல் பரிசு அதிகளவில் கொடுத்துள்ளோம் - அமைச்சர் சக்கரபாணி" என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து விஷமத்தனமான தகவல் சேர்த்து வெளியிட்டிருப்பது தெரிந்தது.
இதை உறுதி செய்துகொள்ள நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியைத் தொடர்புகொள்ள அவர்களுக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பி வைத்தோம். அதற்குள்ளாக இது போலியான நியூஸ் கார்டு என்று "FAKE" முத்திரைகுத்தி நியூஸ் 7 தமிழ் பதிவு ஒன்றை தன்னுடைய சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டிருந்தது.
அமைச்சர் வேறு எங்கும் இப்படி பேசினாரா, அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று கூகுளில் தேடிப் பார்த்தோம். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. இதன் மூலம் மக்களுக்கு நன்றியே இல்லை என்று அமைச்சர் சக்கரபாணி கூறியதாகப் பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கிய மக்களுக்கு நன்றியே இல்லை என்று அமைச்சர் சக்கரபாணி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:மக்களுக்கு நன்றியே இல்லை என்று அமைச்சர் சக்கரபாணி கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False