
பேரணி என்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தான் செய்யும், சிலருக்கு மயக்கம் வரத்தான் செய்யும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பேரணி என்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தான் செய்யும். கடும் வெயிலில் ஒரு சிலருக்கு மயக்கம் வரத்தான் செய்யும். அதிமுக பேரணியால் ஏற்பட்ட போக்குவரத்து நொிசல் காரணமாக மக்கள் மயக்கம் அடைந்தது பற்றிய கேள்விக்கு ஈபிஎஸ் பதில்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நிலைத் தகவலில், “போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வாங்க..! – ஜெ ♦ தாயைப் போல பிள்ளை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ட்விட்டர் பதிவை ஷிவானி சிவக்குமார் @SHIJA25 என்ற ஐடி கெகாண்டவர் 2023 மே 22ம் தேதி பதிவிட்டுள்ளார்.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஃபேஸ்புக்கில், தளி தொகுதி திமுக என்ற ஐடி கொண்டவர் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்திருந்தார். இவர்களைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை பதிவிட்டு, பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கடந்த மே 22, 2023 அன்று சென்னை ஆளுநர் மாளிகை பகுதியில் அதிமுக நடத்திய பேரணியால் அந்த பகுதியில் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொதிக்கும் வெயிலில் வாகன ஓட்டிகள், பொது மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகினர். இதை வைத்து சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருகிறது.
பேரணி என்றால் சிலருக்கு மயக்கம் வரத்தான் செய்யும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்றைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த நியூஸ் கார்டும் பார்க்கத் தந்தி டிவி வெளியிட்டது போலவே உள்ளது என்பதால் உண்மை என்று நம்பி பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மையில் எடப்பாடி பழனிசாமி இப்படிக் கூறினாரா என்று பார்த்தோம். எடப்பாடி பழனிசாமி பேட்டியை யூடியூபில் தேடி எடுத்தோம். அதில் பேரணி என்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தான் செய்யும் என்று கூறியதாக எதுவும் இல்லை. வீடியோவின் 34வது நிமிடத்தில் நிருபர் ஒருவர், போக்குவரத்து நெரிசல் பிரச்னை குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு எடப்பாடி பழனிசாமி, “இது மிகப்பெரிய பிரச்னை. பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் ஆளுநாிடம் புகாரை மனு கொடுப்பதற்காகத்தான் அண்ணன் ஜெயக்குமார் நேரடியாக டிஜிபி-யை சந்தித்து நேரம் கேட்டோம். ஆளுநர் நேரம் கொடுத்துள்ளார்… இந்த இடத்துக்குப் போங்க. அங்க இருந்து ஊர்வலமா வர முடியாது. அங்க காரில் வந்திடுங்க என்று சொன்னாங்க. நாங்க அதே போல காவல் துறை என்ன கண்டிஷன் போட்டோங்களோ, அது போல அங்க ஊர்வலத்தை முடிச்சிட்டு காரில் ஏறி வந்தோம். இதை காவல் துறை தான் ஒழுங்குபடுத்த வேண்டும்” என்று கூறியதை காண முடிந்தது.

அடுத்து இந்த நியூஸ் கார்டை தந்தி டிவி வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான நியூஸ் கார்டுகளைப் பார்த்தோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று நியூஸ் கார்டு ஒன்று கிடைத்தது. ஆனால் அதில், “அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராய மரணங்கள் ஏதும் நிகழவில்லை. ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பின், ஈபிஎஸ் பேட்டி” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து வெளியிட்டிருப்பது தெரிந்தது. இதை உறுதி செய்துகொள்ளத் தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளருக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பிக் கேட்டோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார்.
முடிவு:
பேரணி என்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தான் செய்யும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:பேரணி என்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தான் செய்யும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?
Written By: Chendur PandianResult: False
