
‘’சாதி மத அடிப்படையில் டெலிவரி செய்ய புதிய மசோதாவை அமித் ஷா தாக்கல் செய்கிறார்,’’ என்ற தலைப்பில் வைரலாகி வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

அரசியல் நையாண்டி Political Satire என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், அமித் ஷா புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’இனி சாதி மதம் பார்த்துத்தான் வாடிக்கையாளர்கள் வீட்டிற்கு டெலிவரி செய்பவர்களை அனுப்ப வேண்டும். புதிய சட்ட மசோதாவை அமித் ஷா நாளை தாக்கல் செய்கிறார்,‘’ எனக் கூறியுள்ளனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு, அரசியல் நையாண்டி எனக் கூறினாலும், பலர் உண்மை என நம்பி ஷேர் செய்வதையும், சிலர் இது தவறான செய்தி என கமெண்ட் பகிர்ந்துள்ளதையும் காண முடிகிறது.

சொமாட்டோ நிறுவனம், ஆன்லைன் மூலமாக உணவுப் பொருட்களை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து வருகிறது. இந்நிலையில், சொமாட்டோ நிறுவனத்திடம் இருந்து உணவு பெற்ற வாடிக்கையாளர் ஒருவர், அதனை இந்து அல்லாத நபர் விநியோகித்ததால், அதற்கு கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்குப் பதில் அளித்த சொமாட்டோ நிறுவனம், உணவிற்கு மதம் இல்லை எனக் குறிப்பிட்டிருந்தது.
இதேபோல, மற்றொரு வாடிக்கையாளர், ஹலால் செய்யப்படாத உணவை விநியோகித்ததாகக் கூறி, சொமாட்டோ மீது அதிருப்தி தெரிவித்திருந்தார். ஆனால், அவருக்கு சொமாட்டோ நிறுவனம் பெருந்தன்மையாக பதில் அளித்திருந்தது.
இப்படி இரண்டு விதமாக சொமாட்டோ நடந்துகொண்டது சமூக ஊடக பயனாளர்களிடையே கடும் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது. இந்துவுக்கு ஒரு மாதிரியும், முஸ்லீமுக்கு ஒரு மாதிரியும் நடந்துகொள்ளும் சொமாட்டோ, உணவிற்கு மதம் இல்லை எனச் சொல்வது வேடிக்கையாக உள்ளதாகவும், பலர் விமர்சிக்கின்றனர். இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதையடுத்து சொமாட்டோ ஆப் பயன்படுத்தும் பலரும் ரேட்டிங்கை குறைத்து பதிவிட்டு வருகிறார்கள். இதனால், சொமாட்டோ நிறுவனத்தின் வர்த்தகம் ஏற்ற, இறக்கங்களுடன் கடந்த சில நாட்களாக, ஊசலாட்ட நிலையில் காணப்படுகிறது. இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இந்த சர்ச்சையை தொடர்ந்துதான் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவும் வெளியாகியுள்ளது. இதில், அமித் ஷா இதுதொடர்பாக, புதிய மசோதா தாக்கல் செய்ய உள்ளார் எனக் கூறியுள்ளது சம்பந்தப்பட்ட நபருக்கு விளையாட்டுச் செய்தியாக இருந்தாலும் பலர் இதனை உண்மை என நம்பி ஏமாறும் சூழல் உள்ளது.
இன்றைய சமூக ஊடக உலகில், எது உண்மை, எது பொய் என தெரியாத அளவுக்கு மக்கள் பல விசயங்களில் குழம்பி போயுள்ளனர். அதனால், இத்தகைய வதந்திகளை உண்மை என எளிதில் நம்ப முகாந்திரம் உள்ளதால், இந்த பதிவில் நம்பகத்தன்மை இல்லை என முடிவு செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் நம்பகத்தன்மை இல்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய பதிவுகளை உண்மை என நம்பி மற்றவர்களுக்கு பகிர்ந்து ஏமாற்ற வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:சாதி மத அடிப்படையில் டெலிவரி செய்ய புதிய மசோதா: அமித் ஷா அறிமுகம் செய்கிறாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
