
மேற்கு வங்க மாநிலம் திகாவில் பலத்த சூறைக்காற்றுடன் கரையைக் கடந்த ஆம்பன் புயல் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

ஒன் இந்தியா தமிழின் ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், பெட்டிக்கடை போல தென்படும் ஒரு சிறிய கட்டிடம் புயல் காற்றில் நொருங்கி விழுகிறது. மே 20, 2020 அன்று இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மேற்கு வங்க மாநிலம் திகா.. பலத்த சூறைக் காற்றுடன் கரையைக் கடந்து வரும் ஆம்பன் புயல்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
புயல் கரையைக் கடந்த வீடியோ என்று பகிரப்பட்டுள்ள வீடியோ சில மாதங்களுக்கு முன்பு வைரலாக பகிரப்பட்ட நினைவு இருந்தது. அதனால், ஒன் இந்தியா தமிழ் வெளியிட்ட வீடியோவை உண்மையில் எப்போது எடுக்கப்பட்டது என்று கண்டறிவதற்கான ஆய்வை நடத்தினோம்.

வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இது 2019ம் ஆண்டு ஒடிசா மாநிலத்தை ஃபனி புயல் தாக்கியபோது எடுத்ததாக பல பதிவுகள் நமக்கு கிடைத்தன. இத்தாலிய இணையதளம் வெளியிட்ட வீடியோ கிடைத்தது.
இதன் அடிப்படையில் ஃபனி புயல், ஒடிஷா என யூடியூப்பில் டைப் செய்து தேடியபோது எக்கனாமிக் டைம்ஸ் உள்ளிட்ட ஊடகங்கள் 2019 மே மாதம் வெளியிட்ட வீடியோக்கள் கிடைத்தன.
இதன் மூலம் ஆம்பன் புயல் பாதிப்பு என்று பகிரப்படும் வீடியோ உண்மையில் 2019ம் ஆண்டு ஒடிஷாவைத் தாக்கிய ஃபனி புயலின் போது எடுக்கப்பட்டது என் என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:கரையை கடந்த ஆம்பன் புயல் என்று கூறி பகிரப்படும் பழைய வீடியோ!
Fact Check By: Chendur PandianResult: False
