
‘’இனி எவனும் நீட்டு காட்டுன்னு வந்தா, வக்காளி கொண்டேபுடுபேன்,’’ என எழுத்துப்பிழைகளுடன் கூடிய ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்து, அதன் முடிவுகளை இங்கே தொகுத்துள்ளோம்.
தகவலின் விவரம்:

தீ தமிழன் என்பவர் கடந்த மே மாதம் 3ம் தேதியன்று, இப்பதிவை பகிர்ந்துள்ளார். இதில், அர்விந்த் கெஜ்ரிவால், டெல்லியில் படிக்கும் தமிழ் மாணவர்கள் பற்றி பேசியதாக ஒரு செய்தியையும், ராஜ்கிரண் புகைப்படத்தையும் வைத்து பதிவிட்டுள்ளனர். அதில், ‘’உங்க கல்லூரில நீங்க படிச்சிகங்க, எங்க கல்லூரி நாங்க படிச்சிகிறோம், யாரும் வர வேண்டாம், இனி எவனும் நீட்டு காட்டுன்னு வந்தான் வக்காளி கொண்டேபுடுபேன்,’’ என்று எழுத்துப்பிழைகளுடன் கூடிய வசனத்தையும் சேர்த்து எழுதியுள்ளனர்.
உண்மை அறிவோம்:
டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் தமிழகம் உள்ளிட்ட பிற மாநில மாணவர்கள் அதிகளவில் சேர்வதால், டெல்லியை சேர்ந்த மாணவர்களுக்கு போதுமான இடம் கிடைப்பதில்லை என்றும், இதை சரிசெய்ய, தமிழக மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை கட்டுப்படுத்துவேன் என்றும் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அண்மையில் பேசியிருந்தார். இதற்கு தமிழ்நாட்டில் உள்ள பிரிவினைவாத கட்சிகளின் செயல்பாடுதான் காரணம் என்று, சிலர் குற்றம்சாட்டி ஃபேஸ்புக்கில் கருத்து வெளியிட்டிருந்தனர். அதுபற்றி நாமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தி முடிவுகளை சமர்ப்பித்திருந்தோம். இதுபற்றி விரிவாகப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இந்நிலையில், அர்விந்த் கெஜ்ரிவாலின் பேச்சை மையமாக வைத்து, தமிழகத்திற்குள் படிப்பதற்காக, வெளிமாநில ஆட்கள் யாரும் வந்தால் கொண்டேபுடுவேன் என்று மிரட்டும் தொனியில், நாம் ஆய்வு செய்யும் பதிவில் எழுதியுள்ளனர்.
இவர்கள் குறிப்பிடும் செய்தி, நியூஸ்7 தொலைக்காட்சியில் கடந்த ஏப்ரல் 3ம் தேதி வெளியிடப்பட்டதாகும். அதனை மேற்கோள் காட்டி ஒவ்வொருவரும் தங்கள் விருப்பத்திற்கேற்ற வகையில், சொந்த கருத்தை திணித்து வருகிறார்கள்.
Archived Link
டெல்லியில் உள்ள கல்வி நிறுவனங்களில், தமிழகம், பஞ்சாப், மேற்கு வங்கம் போன்ற பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் படிக்கிறார்கள். இதனால், டெல்லியை பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு போதிய இட ஒதுக்கீடு கிடைப்பதில்லை எனக் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இதன்பேரில்தான், அர்விந்த் கெஜ்ரிவால், மேற்கண்ட கருத்தை வெளியிட்டுள்ளார். இதுபற்றி, டெல்லி பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் அமைப்பு சார்பாக, தேர்தல் ஆணையத்தில் புகார் தரப்பட்டுள்ளது. அத்துடன், ஆம் ஆத்மி கட்சி சார்பில் மீண்டும் ஒருமுறை விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

எனவே, கெஜ்ரிவால் பேசியது உண்மைதான்; ஆனால், அவர் மிரட்டும் தொனியில் எதுவும் பேசவில்லை. அதேசமயம், இந்த பதிவில் கூறப்படும் மிரட்டல் வசனங்கள், இந்த மீம்ஸை தயாரித்தவரின் சொந்த கருத்தாகும். இதற்கும், கெஜ்ரிவாலுக்கும், எந்த சம்பந்தமும் இல்லை.
இதன்பேரில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் பாதி உண்மை மற்றும் பாதி தனிப்பட்ட கருத்து கலந்துள்ளதாக, முடிவு செய்யப்படுகிறது. இதனால், இந்த பதிவில் நம்பகத்தன்மை இல்லை.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் பாதி உண்மை, பாதி தனிப்பட்ட கருத்து கலந்துள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத, செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை மற்றவர்களுக்கு நமது வாசகர்கள் பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

Title:இனி எவனும் நீட்டு காட்டுன்னு வந்தா கொண்டேபுடுவேன்: வைரல் பதிவால் சர்ச்சை
Fact Check By: Parthiban SResult: Mixture
