
தி.மு.க-வில் இருந்து துரைமுருகன் நீக்கப்பட்டதாக செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link 1 I Article Link I Archived Link 2
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் படத்துடன் கூடிய செய்தி லிங்க் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “துரைமுருகன் நீக்கம் முஸ்லிம்கள் குறித்து பேசிய இந்த வீடியோதான் காரணமா?” என்று குறிப்பிட்டு இருந்தனர்.
இந்த செய்தியை, TNNews24 என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 ஆகஸ்ட் 23ம் தேதி வெளியிட்டுள்ளது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தலைவர்களுள் ஒருவர் துரைமுருகன். தி.மு.க பொருளாளராகவும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராகவும் உள்ளார். அவரை நீக்கிவிட்டதாக தலைப்பிட்டுள்ளனர்.

அந்த செய்தியைப் படித்துப் பார்த்தோம். செய்தியின் லீட் பகுதியில், “தி.மு.க பொருளாளர் துரைமுருகன் எதார்த்தமாகப் பேசிய பேச்சுக்கள் இன்று அவரது பொருளாளர் பதவியை பதம் பார்த்து இருக்கிறது. மதுரையில் கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட துரைமுருகன் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ அபூபக்கரை கேலியாக விமர்சனம் செய்தார்” என்று குறிப்பிட்டு இருந்தனர். இதனால், துரைமுருகனின் பொருளாளர் பதவி பறிக்கப்பட்டது என்றே தோன்றியது.

தொடர்ந்து செய்தியைப் படித்துப் பார்த்தபோது இரு தரப்பினர் இடையே பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டது தெரிந்தது. மதுரை நிகழ்ச்சியில், “எங்கே தொப்பி? உட்காரச் சொல்லுங்கள் அப்போதுதான் காஷ்மீர் போல இருக்கும்” என்று பேசியிருந்தார். இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகவே தற்போது இணையத்தில் துரைமுருகன் மீது தி.மு.க தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உடனடியாக அவரை பொருளாளர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வந்தனர்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இஸ்லாமிய அமைப்புக்கள் வலியுறுத்தல் காரணமாக துரைமுருகன் நீக்கப்பட்டது போலவே செய்தி எழுதப்பட்டு இருந்தது. கடைசி பத்தியில், வேறு ஒரு சம்பவத்துடன் தொடர்புபடுத்தி பிரச்னையை உருவாக்க திட்டமிட்டது போல இருந்தது. துரைமுருகனை மீது நடவடிக்கை எடுத்தால், கனி மொழி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துரைமுருகன் தரப்பு வலியுறுத்தியுள்ளது என்று மொட்டைத் தலைக்கும் முழுங்காலுக்கும் முடிச்சிப்போட்டு எழுதியிருந்தனர்.
இதன் மூலம் தலைப்பில் துரைமுருகன் நீக்கம் என்று கூறிவிட்டு, செய்தியில் துரைமுருகனை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாகக் குறிப்பிட்டது தெரிந்தது. தி.மு.க அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் தற்போது பொருளாளராக யார் இருக்கிறார்கள் என்று ஆய்வு செய்தோம். அதில், துரைமுருகன் பெயர் இருந்தது தெரிந்தது.

உண்மையில் எந்த நிகழ்ச்சியில் இந்த சம்பவம் நடந்தது, எங்கே எப்போது நடந்தது என்று தேடினோம். மதுரையில் துரைமுருகன் என்று கூகுளில் டைப் செய்து தேடியதும் தினமலர் வெளியிட்ட செய்தி கிடைத்தது. அதை படித்துப் பார்த்தோம். டிஎன்நியூஸ்24 குறிப்பிட்டது போன்று இது கட்சி நிகழ்ச்சி இல்லை.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொது கணக்கீட்டுக் குழு தலைவராக துரைமுருகன் உள்ளார். மதுரை மத்திய சிறையில் அதிகரிக்கும் கைதிகள் மரணம் குறித்து விசாரணை நடத்தச் சட்டப்பேரவை பொது கணக்கீட்டுக் குழு உறுப்பினர்கள் எல்லோரும் வந்திருப்பது தெரிந்தது. இது தொடர்பான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
அந்த ஆய்வுக்குப் பிறகு துரைமுருகன் உள்ளிட்டவர்கள் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளனர். அந்த பேட்டியின்போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ அபுபக்கரை துரைமுருகன் பேசிய வீடியோவும் நமக்கு கிடைத்தது.
நம்முடைய ஆய்வில், துரைமுருகன் நீக்கம் என்று தவறான தலைப்பிட்டு செய்தி பரப்பியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் நடந்தது கட்சி விழா இல்லை, அரசு நிகழ்ச்சி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
துரைமுருகன் தற்போதும் கட்சியின் பொருளாளராக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், துரைமுருகன் நீக்கம் என்ற செய்தி உண்மையும் பொய்யும் கலந்து, தவறான தலைப்பிட்டு வெளியிட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையும் பொய்யான தகவலும் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:தி.மு.க-வில் இருந்து துரைமுருகன் நீக்கம்?- பரபரப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு
Fact Check By: Chendur PandianResult: False Headline
