
ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு சில மணி நேரங்களில் இந்திய ராணுவம் பிரம்மாண்ட மருத்துவமனையை அமைத்துவிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
பிரம்மாண்ட ராணுவ மருத்துவ மனை போன்ற படம் பகிரப்பட்டுள்ளது. அதன் உட்புறத் தோற்றம் மற்றும் ராணுவ மருத்துவ அதிகாரிகள் படம் பகிரப்பட்டுள்ளது.
நிலைத் தகவலில், “சீனாவை மிஞ்சிய இந்திய ராணுவத்தின் அருமையான செயல். சில மணிநேரங்களிலேயே ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவமனை தயார். Barmer, Rajasthan. இந்தியாவின் பெருமையை எல்லோருக்கும் உணர்த்த அதிகம் பேருக்கு இதை ஷேர் செய்யவும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை A. Anbazhagan என்பவர் 2020 மார்ச் 26 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
படத்தைப் பார்க்கும்போது தற்போது எடுக்கப்பட்டது போல் இல்லை. ராணுவம் ராஜஸ்தானில் மருத்துவமனை அமைத்ததாக செய்தியும் இல்லை. எனவே, இது உண்மையா என்று கண்டறிய முதலில் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, மருத்துவமனை போன்ற ஊடகங்களில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருவதைக் காண முடிந்தது.

Search Link | en.trend.az | Archived Link |
2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த படத்தை ரஷ்ய இணைதளம் ஒன்ற பயன்படுத்தி இருந்தது. அதில், கேஜிஎஸ் 5.5 மில்லியன் மதிப்பிலான நடமாடு மருத்துவமனையை கிர்கிஸ்தானுக்கு ரஷ்யா வழங்குகிறது என்று குறிப்பிட்டிருந்தனர். அதற்கும் முன்பாக பல இணையதளங்களில் இந்த புகைப்படம் பயன்படுத்தப்பட்டு இருப்பதைக் காண முடிந்தது.
தொடர்ந்து தேடியபோது, ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் 2020 மார்ச் 22ம் தேதி வெளியிட்ட ட்வீட் ஒன்று நமக்கு கிடைத்தது. அதில் இந்த படம் அப்படியே இருந்தது.
அந்த ட்வீட்டில், “கொரோனாவை எதிர்கொள்ள பர்மரில் இந்திய ராணுவம் உருவாக்கியுள்ள 1000 படுக்கை வசதிகொண்ட மருத்துவமனை என்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் படம் இது. இதை ராணுவ வட்டாரங்கள் மறுக்கின்றன” என்று குறிப்பிட்டிருந்தனர்.
Archived Link |
இதுதொடர்பாக இந்திய ராணுவத் தரப்பில் ஏதேனும் பதிவு வெளியாகி உள்ளதா என்று அறிய, அதன் ட்விட்டர் பக்கத்தை ஆய்வு செய்தோம். அப்போது, 2020 மார்ச் 23ம் தேதி வெளியான பதிவு ஒன்று நமக்கு கிடைத்தது. அதில், சமூக ஊடகங்களில் பகிரப்படும் படம் இடம் பெறவில்லை.
ஆனால், இந்திய ராணுவம் பர்மரில் 1000 படுக்கை வசதி கொண்ட தனி வார்டுகள் கொண்ட மருத்துவமனையை உருவாக்கியுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல் தவறானது” என்று குறிப்பிட்டிருந்தனர்.
Archived Link |
நம்முடைய ஆய்வில்,
மருத்துவமனை படம் இணைய ஊடங்களில் பல ஆண்டுகளாக சுற்றி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தகவல் தவறானது என்று ராணுவ தரப்பில் கூறியதாக படத்துடன் ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட பதிவு கிடைத்துள்ளது.
பர்மரில் ராணுவம் மருத்துவமனையைக் கட்டியுள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் தவறானது என்று ராணுவம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், ராஜஸ்தான் மாநிலம் பர்மரில் ஒரு சில மணி நேரங்களில் மருத்துவமனையைக் கட்டியுள்ளது என்று பகிரப்படும் படம் மற்றும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ராஜஸ்தானில் ராணுவம் உருவாக்கிய பிரம்மாண்ட மருத்துவமனை படம்!- ஃபேஸ்புக் வதந்தி
Fact Check By: Chendur PandianResult: False
