
‘’இந்திய அரசை எதிர்த்து காஷ்மீர் மக்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டு போராடி வருகிறார்கள்,’’ என்று கூறி ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு வீடியோவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
Mohamed Hakkeem என்பவர் ஆகஸ்ட் 9, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், பாகிஸ்தான் கொடி போன்ற ஒன்றை பொதுமக்கள் ஏராளமானோர் ஏந்தியபடி நடந்துசெல்கிறார்கள். இதன் கீழே, ‘’ தமிழர்களின் ஜல்லிக்கட்டுக்கு கூடிய தமிழர்கடல் போன்று தன் மண்ணை மீட்டெடுக்க பெரும் கடலாய் திரண்டுள்ளனர் காஷ்மீரிகள் வெல்லட்டும் அவர்களின் மண்ணுக்கான போராட்டம் ✊ மலரட்டும் புதிய காஷ்மீராய் ❤️ Paid (தே)மீடியாக்கள் சொல்லாது நாம் பரப்புவோம்/ #FreeKashmir ,’’ என எழுதியுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இவர்கள் குறிப்பிடும் வீடியோ பதிவு, ஜம்மு காஷ்மீரில் கடந்த 2016ம் ஆண்டு புர்ஹான் வாணியின் இறுதி ஊர்வலத்தில் எடுக்கப்பட்டதாகும். இதுபற்றி நமது இந்தி பிரிவு ஏற்கனவே உண்மை கண்டறியும் சோதனை செய்து, அதன் முடிவுகளை சமர்ப்பித்துள்ளது. அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதன்படி, நாம் ஆய்வு செய்யும் வீடியோ, இந்தியா டுடே வெளியிட்டதாகும். அந்த வீடியோ இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை நாம் ஆய்வு செய்யும் வீடியோவுடன் ஒப்பீடு செய்து பார்த்தபோது, இரண்டிலும் ஒரே விதமான காட்சிகளே இடம்பெற்றுள்ளது உறுதியாகிறது. அதனை நமது வாசகர்களும் பார்க்கும் வகையில் இங்கே இணைத்துள்ளோம்.
எனவே, புர்ஹான் வாணி இறுதி ஊர்வலத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது பகிர்ந்து, ஜம்மு காஷ்மீரில் மக்கள் பெருமளவில் திரண்டு போராட்டம் நடத்துவதாகக் கூறி, தவறாகச் சித்தரித்துள்ளனர் என உறுதியாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தி தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என நமது வாசகர்களை கேட்டுக் கொள்கிறோம்.

Title:இந்திய அரசை எதிர்த்து காஷ்மீர் மக்கள் போராட்டம்: வைரலாகும் வீடியோ
Fact Check By: Pankaj IyerResult: False
