
‘’மருது சகோதரர்களின் சிலை குப்பையில் வீசப்பட்டது,’’ எனக் கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், சிவகங்கை அருங்காட்சியகத்தில் மருது பாண்டிய சகோதரர்களின் சிலை குப்பையில் வீசப்பட்டுள்ளதாகக் கூறி வருத்தம் தெரிவித்துள்ளனர். பலரும் உண்மை என நம்பி இந்த பதிவை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட செய்தி உண்மையா என்ற சந்தேகத்தில் தகவல் ஆதாரம் தேடினோம். அப்போது, இதுதொடர்பாக, யூ டர்ன் இணையதளம் உள்ளிட்ட சில ஊடகங்கள் இதுதொடர்பாக ஏற்கனவே உண்மை கண்டறியும் சோதனை செய்து, அதன் முடிவுகளை செய்தியாக வெளியிட்டிருந்த விவரம் கிடைத்தது.
இதன்படி, ‘’மேற்கண்ட சம்பவம் தற்போது நிகழ்ந்தது அல்ல, இது கடந்த ஆண்டில் நிகழ்ந்ததாகும். அத்துடன் இதில் இருப்பவை மருது பாண்டியரின் வெண்கல சிலை இல்லை, அவை திருப்பத்தூரில் உள்ள மருது பாண்டியர் நினைவிடத்தில் வைக்கப்பட்ட சிலைகளை உருவாக்க பயன்படுத்திய அச்சுகள் ஆகும். அவை காலாவதியாகி விட்டதால், குறிப்பிட்ட சிவகங்கை அருங்காட்சியகத்தில் இருந்து எடுத்து வெளியே வைத்திருந்துள்ளனர். ஆனால், இதற்குப் பலரும் கண்டனம் தெரிவிக்கவே, மீண்டும் அச்சு வார்ப்புகளை எடுத்து அருங்காட்சியகம் உள்ளேயே வைத்துவிட்டனர். இதுகுறித்து சிவகங்கை அருங்காட்சியக நிர்வாகம் தரப்பில் கடந்த ஆண்டிலேயே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிவகங்கையில் வெண்கல சிலைகள் எதுவும் மருது பாண்டிய சகோதரர்களுக்கு கிடையாது,’’ என தெரியவருகிறது. இதுபற்றிய செய்தி விவரங்களை கீழே இணைத்துள்ளோம்.
YouTurn News Link | TopTamilNews Article Link |
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
1) மேற்கண்ட சம்பவம் கடந்த ஆண்டில் நிகழ்ந்துள்ளது.
2) இவை வெண்கலச் சிலைகள் அல்ல, சிலை செய்ய பயன்படும் அச்சுகள்.
3) சிவகங்கையில் மருது பாண்டிய சகோதரர்களுக்கு வெண்கலச் சிலை எதுவம் கிடையாது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு செய்த பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:சிவகங்கை அருங்காட்சியகத்தில் மருது சகோதரர்கள் சிலை குப்பையில் வீசப்பட்டதா?
Fact Check By: Pankaj IyerResult: False
