‘’இந்தியாவை விட இலங்கையில் பெட்ரோல் விலை குறைவு,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

இந்த பதிவில், இந்தியாவை விட இலங்கையில் பெட்ரோல் விலை குறைவு என்றும், இந்தியாவில் இருந்துதான் இலங்கை பெட்ரோல் இறக்குமதி செய்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்கின்றனர்.

உண்மை அறிவோம்:
முதலில் ஒரு விசயம், வெளிநாட்டில் விற்பனை செய்யப்படும் பொருளை நம்மூர் விலைவாசியில் ஒப்பீடு செய்வது வீண் குழப்பத்தையே ஏற்படுத்தும். ஏனெனில், பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகள் மட்டுமின்றி அவற்றை இறக்குமதி செய்கிற நாடுகளிலும் அதன் விலை மாறுபடவே செய்யும்.

காரணம், இறக்குமதி செய்யும் நாடு, வளர்ந்ததா, வளருகிறதா அல்லது பின்தங்கியதா என்பதை பொறுத்து, அவற்றுக்குச் சில சலுகைகளையும் எரிபொருள் ஏற்றுமதியாளர்கள் வழங்குகிறார்கள். இதுதவிர, பின்தங்கிய நாடுகள், சிறிய தீவுகள் உள்ளிட்டவற்றுக்கு அந்நிய முதலீட்டுக் கொள்கை விதிமுறைகளை பின்பற்றி மற்ற வளர்ந்த நாடுகள் தாராள சலுகை வழங்குவதும் உலகமயமாக்கலில் இயல்பான விசயமாகும்.

உதாரணமாக, உள்நாட்டுப் போரில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் விலைவாசி மிகவும் அதிகமான ஒன்றுதான். அந்நாட்டு மக்கள் விலைவாசியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை ரூபாய் மதிப்பு, இந்திய மதிப்பை விட குறைவு என்பதால் அதனை நாம் குறைவான விலை என்று சொல்லிவிட முடியாது.

இந்திய ரூபாயில் சம்பளம் வாங்காமல், இலங்கை ரூபாய் மதிப்பில் சம்பளம் வாங்கிக் கொண்டு அங்கேயே வாழ நேரிட்டால், இந்த விலைவாசி எத்தனை மடங்கு அதிகம் என்று நமக்குப் புரியும். இலங்கையில் இறக்குமதி வரி எப்படி உள்ளது என்பதை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இலங்கைக்கு இந்தியா சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களை ஏற்றுமதி செய்வது உண்மைதான். அதுவும் குறைந்த விலையில், இதற்கான முழு காரணம் வர்த்தக நலன் தொடர்பானதாகும். இதுபற்றி ஏற்கனவே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கமும் தரப்பட்டிருக்கிறது.

India Today LinkArchived Link

இதுதவிர இந்தியாவும், இலங்கையும் அண்டை நாடுகள் என்ற முறையில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை பின்பற்றுகின்றன.

Trade Relationship Between India and Sri Lanka

மேலும், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, அதனை சுத்திகரித்து, ஒட்டுமொத்தமாக உள்நாட்டிலேயே விற்பனை செய்வதில்லை. பெருமளவு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வெளிநாடுகளுக்கு, குறைந்த விலையில் வர்த்தக மற்றும் நட்புறவை மேம்படுத்துவதற்காக இந்தியா ஏற்றுமதி செய்கிறது. அப்படித்தான் இலங்கைக்கும் எரிபொருள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அதேபோல, ஒட்டுமொத்தமாக, இலங்கை தனது எரிபொருள் தேவைக்கு இந்தியாவையே சார்ந்துள்ளது என்று சொல்லிவிட முடியாது. காரணம், அந்நாட்டிலும் தற்போது கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நிறுவப்பட்டுள்ளது. தவிர, வளைகுடா நாடுகளில் இருந்து தனது தேவையை சமாளிக்க இலங்கை அரசு, அவ்வப்போது எரிபொருள் இறக்குமதி செய்து வருகிறது.

Sapugaskanda Refinery - Sri LankaCeylon Petroleum CorporationReuters Link

இறுதியாக, பெட்ரோல் விலை தற்போதைய சூழலில் இலங்கை ரூபாய் மதிப்பீட்டில், லிட்டருக்கு ரூ.161 என விற்கப்படுகிறது. இதுவே இந்திய ரூபாய் மதிப்பில் பார்த்தால், ரூ.64.84 வருகிறது.

Sri Lanka – Ministry of Petroleum Resource Development

இந்தியாவில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை (சென்னை நிலவரப்படி) லிட்டருக்கு ரூ.83.63 ஆக உள்ளது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவரும் உண்மையின் விவரம்,

1) வர்த்த ஒப்பந்தம் அடிப்படையில், இலங்கைக்கு இந்தியா சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களை ஏற்றுமதி செய்கிறது. அதேசமயம், மற்ற நாடுகளில் இருந்தும் கணிசமான அளவு பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களை இலங்கை இறக்குமதி மேற்கொள்கிறது. தவிர, உள்நாட்டிலேயே கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றையும் அந்நாடு கொண்டுள்ளது.

2) இந்திய ரூபாய் மதிப்பில், தற்போது இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.64.84 (இலங்கை மதிப்பில் இதுவே ரூ.161) ஆக உள்ளது.

3) ஆனால், நாம் ஆய்வு செய்யும் பதிவில், ‘’இலங்கையின் ஒட்டுமொத்த பெட்ரோல் தேவையும் இந்தியாவை நம்பியே உள்ளது; இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.53க்கு விற்கப்படுகிறது,’’ என்று குறிப்பிட்டுள்ளனர். இதில் முழு உண்மையில்லை.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட தகவலில், நம்பகத்தன்மை இல்லை என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:இந்தியாவை விட இலங்கையில் பெட்ரோல் விலை குறைவாக விற்க காரணம் என்ன?

Fact Check By: Pankaj Iyer

Result: Misleading