
‘’பொங்கல் விடுமுறை கட்டாயமல்ல – மத்திய அரசு அறிவிப்பு,’’ என்று நியூஸ் 18 ஊடகம் செய்தி வெளியிட்டதாகக் கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link | Archived Link |
என்பவர் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை ஜனவரி 10, 2020 அன்று வெளியிட்டுள்ளார். இதில், நியூஸ் 18 ஊடகம் வெளியிட்ட பழைய செய்தியை பகிர்ந்து, அதன் கீழே, தமிழர் திருநாளுக்கு விடுமுறை இல்லை என்று அறிவிக்க நீங்கள் யாருடா வந்தேறி பயலுகளா? என்று எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் நியூஸ் 18 ஊடகத்தின் பெயரில் பகிரப்பட்டுள்ள நியூஸ் கார்டிலேயே, அது பழையது என்பதற்கான தேதி விவரம் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, 2017ம் ஆண்டு வெளியான நியூஸ் கார்டை எடுத்து, தற்போதைய செய்தி போல பகிர்ந்து, ஃபேஸ்புக் வாசகர்களை குழப்பியுள்ளனர் என்று தெளிவாகிறது.

இது பழைய செய்திதான் என்பதற்கான சில செய்தி ஆதாரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
HinduTamil News Link | Twitter post Link |
அதேசமயம், நடப்பு 2020ம் ஆண்டில் பொங்கல் விடுமுறை பற்றி மத்திய அரசு ஏதேனும் அறிவிப்பு வெளியிட்டுள்ளதா என விவரம் தேடினோம். அப்போது, ஜனவரி 15ம் தேதி பொங்கல்/மகர சங்கராந்தி நாளில் மத்திய அரசு விருப்ப விடுமுறை அறிவித்திருந்த விவரம் கிடைத்தது.

இதன் முழு விவரம் காண கீழே தரப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Dopt.gov.in Link | Archived Link |
அதேசமயம், பொங்கலுக்கு, தமிழக அரசு 3 நாட்கள் தொடர் விடுமுறை அளித்துள்ளது. இது மட்டுமின்றி, ஜனவரி 18, 19 ஆகிய நாட்கள் சனி, ஞாயிறு என்பதால், 2020ம் ஆண்டில் பொங்கலுக்கு 5 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. மேலும், போகி பண்டிகை தினமான ஜனவரி 14 அன்றும் விருப்ப விடுமுறை தரப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி ஜனவரி 16ம் தேதி பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக, தமிழகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் எனக் கூறப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பவே, தற்போது அந்த நிகழ்ச்சியை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது.
இந்த சர்ச்சையை மையமாக வைத்தே பொங்கல் விடுமுறையில் மத்திய அரசும், பிரதமர் மோடியும் தலையிடுவதாகக் கூறி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளதுபோன்ற வதந்திகளை சிலர் பரப்பியுள்ளனர்.
உண்மையில், பொங்கல் பண்டிகை என்பது ஒரு மாநிலம்/பிராந்தியம் சார்ந்த பண்டிகையாகும். இதற்கு சம்பந்தப்பட்ட மாநில அரசுதான் விடுமுறை தர முடியும். தொடர்ந்து 4 நாட்கள் கொண்டாடப்படுவதால், பொங்கலுக்கு மத்திய அரசு விருப்ப விடுமுறை தரலாம் அல்லது ஏதேனும் ஒருநாள்தான் விடுமுறை தர முடியும். இதில் மத்திய அரசு கூறியதாக நியூஸ் 18 ஊடகம் பெயரில் 2017ல் வெளியான பழைய செய்தியை தேவையின்றி சுய அரசியலுக்காக பகிர்ந்து தற்போது குழப்பத்தை விளைவித்துள்ளனர்.
News 18 Tamil Link 1 | News 18 Tamil Link 2 | HinduTamil Link |
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் பழைய செய்தியை புதியதுபோல பகிர்ந்து, குழப்பம் விளைவித்துள்ளனர் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:பொங்கல் விடுமுறை: நியூஸ் 18 ஊடகத்தின் பழைய செய்தியை பரப்பும் ஃபேஸ்புக் பயனாளர்கள்!
Fact Check By: Pankaj IyerResult: Partly False
