
மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷாவை சில ஆண்டுகளுக்கு முன்பு போலீசார் கைது செய்ததாக ஒரு பழைய புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், அவர் கிரிமினல் என்று குறிப்பிட்டுள்ளனர். இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அன்று இவர் ஒரு கிரிமினல் – இன்று இவர் மத்திய உள்துறை அமைச்சர்.
இன்னோரு வர் அன்று ஒரு கொலையாளி இன்று ஒரு மத்திய மந்திரி.
அமித் ஷா கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லும் படத்தில், “இது பழைய படமே என்றாலும் நம்மில் பலரும் பார்த்திராத படம். கிரிமினல் குற்றவாளி அமித் ஷாவை கைது செய்து அழைத்துச் சென்றபோது எடுத்த படம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
நிலைத்தகவலில், அன்று இவர் ஒரு கிரிமினல்… இன்று இவர் மத்திய உள்துறை அமைச்சர். இன்னொருவர் அன்று ஒரு கொலையாளி, இன்று ஒரு மத்திய அமைச்சர் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Acs Mani என்பவர் 2019, ஜூன் 1ம் தேதி வெளியிட்டுள்ளார். இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குஜராத் மாநில உள்துறை அமைச்சராக அமித்ஷா இருந்தபோது, 2005 மற்றும் 2006ம் ஆண்டு போலி என்கவுண்டர் நடத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த சி.பி.ஐ, 2010ம் ஆண்டு அமித்ஷாவை கைது செய்து சிறையில் அடைத்தது. மூன்று மாதங்கள் சிறையில் இருந்த அவர் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இதன் பின்னர், இந்த வழக்கு குஜராத் மாநிலத்திலிருந்து மகாராஷ்டிராவுக்கு மாற்றப்பட்டது.
2014ம் ஆண்டு பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த வழக்கில் இருந்து அமித்ஷாவை விடுவித்து சி.பி.ஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ளது அமித்ஷாதானா, சி.பி.ஐ அவரை கைது செய்தபோது எடுத்த படமா என்று கண்டறிய கூகுளில் தேடினோம். அவுட் லுக் இந்தியா இணைய பக்கத்தில், 2015ம் ஆண்டு வெளியான அமித் ஷா விடுவிக்கப்பட்டது தொடர்பான ஒரு கட்டுரையில் இந்த படம் பயன்படுத்தப்பட்டது தெரிந்தது.
“விசாரணை முடிவதற்கு முன்னதாகவே பவர்ஃபுல் மனிதரை விடுவிப்பதற்கான காரணத்தைக் கண்டறிந்த சி.பி.ஐ நீதிமன்றம்” என்ற அந்த கட்டுரையில், 2010ம் ஆண்டு அமித் ஷா கைது செய்யப்பட்ட பழைய படத்தை பயன்படுத்தியது தெரிந்தது.

அந்த செய்தியில், 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் தேதி அமித் ஷா மீதான போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோயா நாக்பூர் அரசு விருந்தினர் மாளிகையில் மரணம் அடைந்தார்.
அதைத் தொடர்ந்து புதிய நீதிபதியாக எம்.பி.கோஸாவி வந்தார். அதைத் தொடர்ந்து டிசம்பர் 15-17ல் தன்னை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி அமித் ஷா மனு தாக்கல் செய்தார்.
டிசம்பர் 30, 2014ல் அமித்ஷாவை வழக்கிலிருந்து விடுவிப்பதாக 75 பக்க உத்தரவைப் பிறப்பித்தார் நீதிபதி. அமித்ஷாவை விடுவித்ததன் மூலம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டும் நீர்த்துப்போகிறது” என்று குறிப்பிட்டுள்ளனர். அந்த செய்தியை விரிவாகப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
நம்முடைய தேடலில், 2010ம் ஆண்டு அமித்ஷா கைது தொடர்பான என்.டி.டி.வி செய்தி நமக்குக் கிடைத்தது. அதில் உள்ள வீடியோவில் அமித் ஷா கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்படும் வீடியோவும் இருந்தது.

அமித் ஷா மீது தொடரப்பட்ட ஏதேனும் ஒரு வழக்கில் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதா, அவர் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் என்ன என்ன என்று தேடினோம்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்டபோது அவர் தாக்கல் செய்த வேட்புமனுவைத் தேடி எடுத்தோம். அதில், தன் மீது 4 கிரிமினல் வழக்கு நிலுவையில் இருப்பதாக அமித் ஷா தெரிவித்திருந்தார். ஆனால், எந்த ஒரு வழக்கிலும் அவருக்கு தண்டனை வழங்கப்படவில்லை.


இதன் மூலம், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், அமித்ஷா ஒரு காலத்தில் கிரிமினல் என்று கூறியது தவறானது. சந்தேகத்தின் அடிப்படையில் தொடரப்படும் வழக்கை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஒருவரை குற்றவாளி என்று முடிவு செய்துவிட முடியாது. நீதிமன்ற தீர்ப்பே இறுதியானது. அமித்ஷாவை சி.பி.ஐ நீதிமன்றம் குற்றமற்றவர் என விடுவித்துள்ளது. இந்த நிலையில், அவரை குற்றவாளி என்று குறிப்பிட்டிருப்பது தவறானது, விஷமத்தனமானது.
இந்த பதிவில் மற்றொரு அமைச்சரைப் பற்றி குறிப்பிட்டிருந்தனர். அவர் ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த பிரதாப் சாரங்கி. ஆஸ்திரேலிய மத போதகர் மற்றும் அவருடைய இரண்டு மகன்கள் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் பிரதாப் சரங்கிக்கு தொடர்பு இருப்பதாக சமூக ஊடகங்களில் குற்றம்சாட்டப்படுகிறது.
ஆஸ்திரேலிய பாதிரியார் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் பிரதாப் சாரங்கியின் பெயர் எந்த ஒரு நிலையிலும் சேர்க்கப்படவில்லை. அவர் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால், வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் இல்லை என்று போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை.
இருப்பினும் அவர் மீது 7 கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளதாக, அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
நாம் மேற்கொண்ட ஆய்வில்,
2010ம் ஆண்டு போலி என்கவுண்டர் வழக்கில் சி.பி.ஐ அதிகாரிகள் அமித்ஷாவை கைது செய்துள்ளனர்.
அமித் ஷா கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்படும் பழைய படம் கிடைத்துள்ளது.
அமித்ஷா கைது செய்யப்பட்டது தொடர்பான என்.டி.டி.வி வீடியோ கிடைத்துள்ளது.
2014ம் ஆண்டு இந்த வழக்கில் இருந்து அமித்ஷாவை சி.பி.ஐ நீதிமன்றம் விடுவித்துள்ளது.
எந்த ஒரு வழக்கிலும் தண்டனைப் பெற்றதாக அமித்ஷா தாக்கல் செய்த தேர்தல் வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், அமித்ஷாவை ஒரு காலத்தில் கிரிமினல் என்று கூறியது தவறான, விஷமத்தனமான தகவல் என்று நிரூபிக்கப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:காவி சீருடைக்கு மாறுகிறதா இந்திய கிரிக்கெட் அணி? – பரபரப்பை கிளப்பிய ஃபேஸ்புக் பதிவு
Fact Check By: Praveen KumarResult: False
