கிறிஸ்தவ மதத்திற்கு மாறினாரா பொன் ராதாகிருஷ்ணன்?
பா.ஜ.க மூத்த தலைவர்களுள் ஒருவரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
மறைந்த சங்கராச்சாரியார் முன்னிலையில் பொன் ராதாகிருஷ்ணன் தரையில் அமர்ந்திருக்கும் படத்தையும் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் பொன் ராதாகிருஷ்ணன் தலையில் கை வைத்து ஆசிர்வதிக்கும் படத்தையும் சேர்த்து பகிர்ந்துள்ளனர். சங்கராச்சாரியாருடன் உள்ள படத்தில், "இந்து மதத்தில் மரியாதை கிடைக்காததால் கிறிஸ்துவ மதம் மாறிய பொன். ராதாகிருஷ்ணன்" என்று உள்ளது.
கிறிஸ்தவா பாதிரியாருடன் இருக்கும் படத்தில், "ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்து விலகி பாதிரியார் முன்னிலையில் இணைந்தார்... தினமலர் செய்தி" என்று உள்ளது.
நிலைத் தகவலில், "மதத்தை விட மரியாதையே முக்கியமானது என்ற முடிவை எடுத்த பொன்னாருக்கு எத்தனை லைக்ஸ் பிரெண்ட்ஸ்ஸ்ஸ்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை Arunkumar Veerappan என்பவர் பிப்ரவரி 16. 2020 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து தி.மு.க, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பேட்டிகள் அளித்து தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு தலைவர் நியமிக்கப்படாத குறை இல்லாத அளவுக்கு செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் பொன் ராதாகிருஷ்ணன் மதம் மாறிவிட்டார் என்று வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.
Search Link |
இந்த புகைப்படம் 2019 நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் எடுக்கப்பட்டது போல உள்ளது. தினமலரில் இது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. இந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடினோம். அப்போது 2019 ஏப்ரல் மாதம் முதல் பலரும் இதை ஷேர் செய்திருப்பது தெரிந்தது.
Archived Link | Search Link |
இந்த கட்டுரை தயாரான பிப்ரவரி 19, 2020 அன்று கூட தி.மு,க-வுக்கு எதிராக ஆக்ரோஷமாக பேட்டி அளித்திருந்தார். மதம் மாறியது தொடர்பாக எந்த செய்தியும் கிடைக்கவில்லை. கிறிஸ்தவ பாதிரியாருடன் இருக்கும் படம் பற்றிய தகவல் கிடைக்காத சூழ்நிலையில், இந்த பதிவு குறித்து பொன். ராதாகிருஷ்ணனின் செயலாளரிடம் பேசினோம்.
அப்போது அவர், "இது வழக்கமான வதந்திதான். இது 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது எடுத்த படம். நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் எல்லா சமுதாயத் தலைவர்களையும் சந்தித்தார். அப்போது அவர்கள் முறைப்படி தலையில் கை வைத்து வாழ்த்தினார்கள். இதை வைத்து எப்படி எல்லாம் வதந்தி பரப்பப்படுகிறது பாருங்கள்" என்றார்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், பொன்.ராதாகிருஷ்ணன் மதம் மாறினார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.