
மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான் கையில் போடப்பட்டுள்ள கட்டு போலியானது என்ற வகையில் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
எலும்பு முறிவு காரணமாக கையில் கட்டுப் போட்டுள்ள மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகானின் இரண்டு புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது. முதல் படத்தில் கட்டு இடது கையில் உள்ளது. அடுத்த படத்தில் கட்டு வலது கையில் உள்ளது.
நிலைத் தகவலில், “ஒரு படம் காலையில் எடுத்தது. மற்றொரு படம் மாலையில் எடுத்தது. உடை மாற்றும்போது, கவனக் குறைவாக கட்டையும் மாற்றிவிட்டார்கள்!” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, Kundrathu Murugaraj என்பவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் 2019 அக்டோபர் 4ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பார்க்கும்போதே மிரர் இமேஜ் படத்தை வைத்து ஏமாற்று வேலை செய்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. இதையும் பலரும் ஷேர் செய்து வருகிறார்களே என்ற ஆச்சரியம் ஏற்பட்டது. சிவ்ராஜ் சிங் கையில் எப்போது முறிவு ஏற்பட்டது என்று முதலில் தேடினோம். கூகுளில், சிவ்ராஜ் சிங் சௌகான் கையில் முறிவு என்று ஆங்கிலத்தில் டைப் செய்தால், அவர் கையில் உள்ள கட்டு தொடர்பாக ஊடகங்கள் வெளியிட்ட உண்மை கண்டறிந்த கட்டுரைகள்தான் கிடைத்தன. வட இந்தியாவில் மிகப் பெரிய அளவில் இந்த புகைப்படம் வைரலாக பரவி வந்திருப்பது தெரிந்தது.

Search Link |
நம்முடைய தேடலில், சிவ்ராஜ் சிங்குடன் ஒருவர் எடுத்த செல்ஃபி புகைப்படம் கிடைத்தது. Pappu Singh INC என்ற ட்விட்டர் ஐ.டி-யில் இந்த இரண்டு படங்களும் நமக்குக் கிடைத்தன. அந்த படத்தை ஆய்வு செய்தோம். செல்ஃபி எடுக்கும்போது எப்போதும் மிரர் இமேஜ் எனப்படும் வலது – இடது மாற்றம் இருக்கும். அந்த வகையில் மிரர் இமேஜ் என்று வழக்கமாக சொல்லும் ஃபிளிப் இமேஜ் இது என்பது தெரிந்தது.
Archived Link |
1) வழக்கமாக சட்டை பாக்கெட் இடது பக்கம்தான் இருக்கும். ஹெலிகாப்டர் அருகில் நிற்கும் புகைப்படத்தில் சட்டை பாக்கெட் வலது பக்கம் உள்ளது.
2) அதேபோல் சிவ்ராஜ் சிங் சௌகானிடமிருந்து மலர் மாலையை வாங்கும் பாதுகாவலரின் சட்டை பாக்கெட்டும் வலது பக்கம் உள்ளது. வாட்ச் வலது கையில் கட்டப்பட்டது போல உள்ளது.
3) சிவ்ராஜ் சிங் சௌகான் மற்றும் பாதுகாவலர்கள், செல்ஃபி எடுத்தவரின் சட்டை பட்டன்கள் மிரர் இமேஜில் மாறியிருப்பது தெரிகிறது.
4) தலைமுடியை இடது புறம் வகிடு எடுப்பார்கள். ஆனால், படத்தில் உள்ளவர்களுக்கு வலது புறம் உள்ளது.

இந்த படத்தை மிரர் சரி செய்து சரியான நிலையில் வைத்துப் பார்த்தால், படம் சரியாக இருப்பது தெரிகிறது. அவருக்கு வலது கையில் முறிவு காரணமாக கட்டுப்போட்டுள்ளது தெளிவாகிறது.சிவ்ராஜ் சிங் சௌகான் ட்விட்டர் பக்கத்தை ஆய்வு செய்தோம். அதில் அவர் வலது கையில் கட்டுடனே பல நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வருவது தெரிந்தது.
Archived Link |
நம்முடைய ஆய்வில், சிவ்ராஜ் சிங் சௌகானுக்கு வலது கையில் முறிவுக்குக் கட்டு போடப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இடது கையில் கட்டு என்று வெளியான படம் செல்ஃபி எடுத்தபோது கிடைத்த மிரர் இமேஜ்.
இந்த மிரர் இமேஜை வைத்து தவறான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது தெளிவாகி உள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், கையில் முறிவு ஏற்பட்டதாக கட்டுப் போட்டு சிவ்ராஜ் சிங் ஏமாற்றுகிறார் என்ற ஃபேஸ்புக் பதிவு பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ம.பி முன்னாள் முதல்வர் கைமுறிவு நாடகமா? – ஃபேஸ்புக் வைரல் புகைப்படம்!
Fact Check By: Chendur PandianResult: False
