
‘’உத்தரப் பிரதேசத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஜோதிடர்களை பணியமர்த்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
பெரியார் பேரவை பெரியார் பேரவை என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை ஜூலை 20, 2019 அன்று பகிர்ந்துள்ளது. இதனை பலரும் உண்மை என நினைத்து வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளதுபோல, உத்தரப் பிரதேச மாநில அரசு ஏதேனும் புதிய திட்டம் அறிவித்துள்ளதா என்ற சந்தேகத்தில் தகவல் ஆதாரம் தேடினோம். அப்போது நமக்கு ஒரு அதிர்ச்சிகர தகவல் கிடைத்தது. ஆம். இது உத்தரப் பிரதேசத்தில் செய்யப்படவில்லை என்றும், இது மத்திய பிரதேசத்தில் வெளியான திட்டம் என்றும் தெரியவந்தது.
இந்த திட்டம் கடந்த 2017ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது பாஜக.,வின் சிவ்ராஜ் சிங் சவுகான் மத்திய பிரதேச முதல்வராக இருந்துள்ளார்.
இதுபற்றி அவுட்லுக் வெளியிட்ட செய்தி ஒன்றில், மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவில் ஜோதிட நிபுணத்துவம் பெற்றவர்களை பணியமர்த்தி நோயாளிகளுக்கும், பயிற்சி மருத்துவர்களுக்கும் ராசி பலன் அடிப்படையில் ஒருவரின் நோயை கண்டறியும் முறையை செயல்படுத்த மத்திய பிரதேச அரசு நடவடிக்கை எடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது. அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இந்த விவகாரம் பற்றி அப்போதே பலவித வதந்திகள் பரவியதை அடுத்து இதுபற்றி Scroll.in உண்மை கண்டறியும் சோதனை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இதன்படி, ‘’முதலில், இந்த தகவலை இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் செய்தியாக வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்ட தகவல் பலரையும் குழப்புவதாக இருந்ததால், இதுதொடர்பாக உண்மை கண்டறியும் ஆய்வு நடத்த தீர்மானித்தோம்,’’ என்று, Scroll.in குறிப்பிட்டுள்ளது.
ஆனால், இது தவறான தகவல் என்றும், போபால் நகரில் உள்ள யோகா மையம் ஒன்றில் ஜோதிட ஆலோசனைப் பிரிவு ஒன்றை தொடங்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், அரசு மருத்துவமனைகளில் ஜோதிட சிகிச்சை மையம் எதுவும் தொடங்கவில்லை என்றும் மத்திய பிரதேச அரசுக்குச் சொந்தமான மகரிஷி பதஞ்சலி சமஸ்கிருத சன்ஸ்தான் நிறுவன இயக்குனர் பி.ஆர்.திவாரி மறுத்துள்ளார்.
இதுபற்றி Scroll வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
1) இந்த திட்டம் உத்தரப் பிரதேசத்தில் அறிவிக்கப்படவில்லை.
2) இது மத்திய பிரதேசத்தில் கடந்த 2017ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
3) இவர்கள் சொல்வது போல அரசு மருத்துவமனைகளில் ஜோதிடர்கள் பணியமர்த்தப்படவில்லை. மாறாக, போபாலில் உள்ள மத்திய பிரதேச அரசுக்குச் சொந்தமான யோகா மையம் ஒன்றில் ஜோதிட நிபுணர்களை பணியமர்த்தவே திட்டமிட்டுள்ளனர்.
4) இதுபற்றி ஊடகங்கள் தவறான செய்தியை வெளியிட்டதை அடுத்து, மத்திய பிரதேச அரசு தரப்பில் உரிய விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ள செய்தி, தவறான ஒன்று என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் செய்தியில் கூறப்பட்டுள்ள தகவல் தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ எதையும் உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:மருத்துவமனைகளில் ஜோதிடரை நியமிக்க உத்தரப் பிரதேச அரசு திட்டம்: உண்மை அறிவோம்!
Fact Check By: Pankaj IyerResult: False
