கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி மகன் மரணத்தை இருட்டடிப்பு செய்தனவா தமிழ் ஊடகங்கள்?

சமூக ஊடகம் | Social சமூகம் தமிழ்நாடு | Tamilnadu

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் மகன் வாலேஸ்வரன் நேற்று மரணமடைந்தார் ஆனால் தமிழக ஊடகங்களில் செய்தி வெளியிடவில்லை என்று ஒரு பதிவு பல ஆண்டுகளாக பகிரப்பட்டு வருகிறது. தற்போதும் வைரலாக பகிரப்படும் அந்த தகவல் சரியா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

முதியவர் ஒருவரின் படத்தோடு பதிவு வெளியாகி உள்ளது. அதில், “கண்ணீர் வணக்கம்! கப்பலோட்டிய தமிழன் அய்யா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் பெற்ற மகன் வாலேஸ்வரன் நேற்று மரணமடைந்தார்… பாழாய்ப்போன ஒரு தமிழக ஊடகம் கூட செய்தி வெளியிடவில்லை” என்று குறிப்பிட்டுள்ளனர்.

Facebook LinkArchived Link

2016ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி இந்த பதிவை Anu Priya என்பர் பதிவிட்டுள்ளார். தற்போதும் இந்த பதிவை ஷேர் செய்து வருகின்றனர். இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இந்த பதிவு 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி வெளியாகி உள்ளது. நேற்றுதான் வ.உ.சி-யின் மகன் இறந்தார் என்று குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி அவர் மரணமடைந்தாரா, அவர் மரணம் தொடர்பான செய்தியை எந்த ஒரு ஊடகமும் வெளியிடவில்லையா என்று ஆய்வு செய்தோம்.

Search Link

வாலேஸ்வரன் என்று கூகுளில் டைப் செய்து தேடியபோது 2015ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி அவர் காலமானார் என்று தமிழ் தி இந்து, ஒன் இந்தியா, தினமலர், தினமணி, தினகரன் என்று தமிழின் முன்னணி ஊடகங்கள் வெளியிட்ட செய்தி நமக்கு கிடைத்தது. 

தினமணியில் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள படமும் கிடைத்தது. அதில், “வ.உ.சி.யின் மகனான வாலேஸ்வரன் (88) சென்னையில் சனிக்கிழமை காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் சென்னை பெசன்ட் நகரில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நடைபெறுகிறது. வ.உ.சி.யின் நான்காவது மகனான வாலேஸ்வரன், தமிழக தொழிலாளர் நலத் துறையின் இணை ஆணையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள அவரது மகனின் இல்லத்தில் அவர் வசித்து வந்தார். வயது முதிர்வு, உடல் நலமின்மை ஆகிய காரணங்களால் அவர் சனிக்கிழமை காலமானார்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

hindutamil.inArchived Link 1
dinamani.comArchived Link 2
tamil.oneindia.comArchived Link 3
dinamalar.comArchived Link 4

நம்முடைய ஆய்வில்,

வ.உ.சி-யின் மகன் வாலேஸ்வரன் 2015ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி சென்னையில் காலமான செய்தி கிடைத்துள்ளது.

இதன் மூலம் வாலேஸ்வரன் 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி அன்று மரணம் எய்தினார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதியாகிறது.

மேலும், வாலேஸ்வரன் மரணம் பற்றி எல்லா ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்ததும் நமக்கு கிடைத்துள்ளது. 

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், வ.உ.சி-யின் மகன் வாலேஸ்வரன் காலமானது பற்றி எந்த ஒரு ஊடகமும் செய்தி வெளியிடவில்லை என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி மகன் மரணத்தை இருட்டடிப்பு செய்தனவா தமிழ் ஊடகங்கள்?

Fact Check By: Chendur Pandian 

Result: False