மாப்பிள்ளை பாஜக என்று தெரிந்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் என புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

மாப்பிள்ளை பா.ஜ.க என்று தெரிந்ததால் கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய பெண் என்று புதிய தலைமுறையில் செய்தி வெளியானது போன்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் நம்முடைய வாட்ஸ் அப் சாட் பாட் எண்ணுக்கு ஒரு நியூஸ் கார்டை அனுப்பி அது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். புதிய தலைமுறை லோகோ பாதி தெரியும் வகையில் பகிரப்பட்டு வரும் நியூஸ் கார்டு அது. அதில், “மாப்பிளை பாஜக என்று தெரிந்ததால் கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்” என்று இருந்தது. இதனுடன் “தமிழ்நாட்டுப் பெண்கள் ரொம்ப உசார் பா..” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

இந்த பதிவை Santhiyagu Jesuraj என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜனவரி 10ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போலப் பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்த சம்பவம் எங்கு, எப்போது நடந்தது என்று குறிப்பிடவில்லை. எந்த இடம் என்று தெரியாமல் யாரிடம் கேட்பது என்ற கேள்வி எழுந்தது. அதே நேரத்தில் இந்த பதிவில் புதிய தலைமுறை லோகோ தெரிவதால் புதிய தலைமுறையை வைத்து உண்மை நிலையை கண்டறியலாம் என்று ஆய்வு செய்தோம்.

புதிய தலைமுறை லோகோ முழுமையாக இல்லை. இருப்பினும் புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற தோற்றத்தை இந்த பதிவு ஏற்படுத்துகிறது. இந்த தமிழ் ஃபாண்ட் வழக்கமாக புதிய தலைமுறை பயன்படுத்தும் ஃபாண்ட் இல்லை. மாப்பிள்ளை என்பதை மாப்பிளை என்று குறிப்பிட்டுள்ளனர். இவை எல்லாம் இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை வெளியிட்டிருக்க வாய்ப்பில்லை என்று உறுதி செய்தன.

இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்வதற்கான ஆய்வை நடத்தினோம். புதிய தலைமுறையில் இப்படி ஏதும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். அப்போது 2020ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி புதிய தலைமுறை வெளியிட்ட வீடியோவின் முகப்புப் படத்தை எடுத்து எடிட் செய்திருப்பது தெரிந்து. உண்மையான முகப்பு படத்தில், “தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய பெண்! கடைசிவரை வராத காதலன்..!” என்று இருந்தது. 

இது தொடர்பான செய்திகளைப் பார்த்தோம். அப்போது, ஊட்டியில் இந்த சம்பவம் நடந்தது என்றும், தாலி கட்டும் நேரத்தில், தன்னுடைய காதலன் வர உள்ளார், எனவே இந்த திருமணம் வேண்டாம் என்று அந்த பெண் கூறி எழுந்து சென்றதாக குறிப்பிட்டிருந்தனர். ஆனால், அன்றைக்கு அந்த பெண்ணின் காதலன் வரவில்லை என்றும் தெரிவித்திருந்தனர்.

இதற்கு ஒரு சில நாட்கள் கழித்து திருமணத்தை நிறுத்திய பெண் அளித்த விளக்கத்தையும் ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. அதில், மாப்பிள்ளை மீது பல்வேறு தவறான தகவல்கள் வந்ததாகவும், அதனால்தான் காதலன் இருக்கிறான் என்று பொய் சொல்லி திருமணத்தை நிறுத்தியதாகவும், தன்னை யாரும் விமர்சிக்க வேண்டாம் என்றும் கூறி அவர் பேசிய ஆடியோவையும் வெளியிட்டிருந்தன. இதன் மூலம் மாப்பிள்ளை பாஜக-வைச் சேர்ந்தவர் என்பதால் திருமணத்தை நிறுத்தினார் என்ற தகவல் தவறானது என்று உறுதியாகிறது.

இந்த நியூஸ் கார்டு குறித்து புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகி ராசுஸ்ஸை தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இது போலியான நியூஸ் கார்டு. நாங்கள் இதை வெளியிடவில்லை என்று உறுதி செய்தார்.

ஒருவேளை, தமிழகத்தில் வேறு எங்காவது நிகழ்ந்ததை இப்படி புதிய தலைமுறை நியூஸ் கார்டை பயன்படுத்தி வெளியிட்டுள்ளார்களா என்று அறிய கூகுளில் தேடினோம். ஆனால், நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் உத்தரப் பிரதேசத்தில் 2016ம் ஆண்டு இப்படி ஒரு நிகழ்வு ஏற்பட்டிருப்பதாக செய்தி ஒன்று கிடைத்தது. ஆனால், அதுவும் கடைசி நேரத்தில் நின்ற திருமணம் அல்ல.

இந்த செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டிருந்தது. கான்பூரில் நடந்ததாகக் குறிப்பிட்டிருந்தது. ஆனால், மாப்பிள்ளை, மணமகள் பெயர் எதையும் வெளியிடவில்லை. தொழிலதிபர் ஒருவருக்கும், அரசு ஊழியராக பணியாற்றி வரும் பெண்ணுக்கும் திருமணம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. இரு குடும்பத்தாரும் திருமண செலவுகளைப் பகிர்ந்துகொள்வது என்று முடிவு செய்ய கோவிலில் சந்தித்து முடிவு செய்வது என்று திட்டமிடப்பட்டது. அதன் பிறகு திருமண நிச்சயம் செய்வது என்றும் திட்டமிடப்பட்டது.

அசல் பதிவைக் காண: indiatimes.com I Archive

இந்த சூழலில் மணமகனுக்கும், மணமகளுக்கும் இடையே உரையாடல் நிகழ்ந்துள்ளது. பலவற்றைப் பேசிய அவர்கள் அரசியல் பற்றிப் பேசியுள்ளனர். நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதற்கு மோடிதான் காரணம் என்று அந்த பெண் கூறியுள்ளார். ஆனால், அதற்கு அந்த மணமகன் மறுப்பு தெரிவித்துள்ளார். மணமகள் கூறுவதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இனி இருவரும் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று முடிவெடுத்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து திருமணம் கைவிடப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர்.

இதன் மூலம் மாப்பிள்ளை பா.ஜ.க என்பதால் திருமணத்தை நிறுத்திய தமிழ் பெண் என்று பகிரப்படும் தகவல் தவறானது. இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை வெளியிடவில்லை என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மாப்பிள்ளை பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் என்று பரவும் தகவல் தவறானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மாப்பிள்ளை பாஜக என்று தெரிந்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் என புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?

Fact Check By: Chendur Pandian 

Result: Altered